வியாழன், 13 டிசம்பர், 2007

ஞாபகங்கள்

சில கதைகள் எழுதபடுகின்றன. ஒரு சில கதைகள் தாமாகவே தங்களை எழுதிக் கொள்கின்றன. இந்த இரண்டாம் இரகத்தைச் சேர்ந்ததுதான் இக்கதை. ஆகையால் இந்த கதைக்கு எப்படி முன்னுரை எழுதுவது என எனக்கு புரியவில்லை. இருந்த போதிலும் ஒரு சில வார்த்தைகள்.....

என்னுடைய‌ ம‌ருத்துவ‌ க‌ல்லூரியின் கால‌த்தில் போது உருவான‌ க‌தை இது. பெண்மையும் தாய்மையும் ஆண்களுக்குச் சுயமாக அமையாவிட்டாலும்கூட‌, அதனை உணரும் வல்லமை நிச்சயம் அவர்களுக்கு உண்டு. அந்த உந்துதலின் பேரில், என்னை மீறி எழுதிய‌ க‌தைக‌ளில் இதுவும் ஒன்று.

இந்த கதைக்கான பொறி ஒரு கருகலைப்பு சம்பவம். ஆனால் அதன் நிகழ்வும் தாக்கமும் எனது கற்பனையும் கற்பிதங்களையும் தாண்டி, தன்னை ஒரு படிவமாக ஸ்தாபித்து கொண்டன.

மாறி வ‌ரும் ச‌மூதாய‌த்தில் க‌ற்புநெறி கோட்பாடுக‌ள் தள‌ர்ந்தும் மாற்ற‌ப்ப‌ட்டும் வ‌ருகின்ற‌ன‌. த‌னிம‌னித‌ அள‌வில் அத‌ன் மாற்ற‌ங்க‌ள் ம‌னித‌ குணாதிச‌ய‌ங்க‌ளை எவ்வாறு பீடிக்கிற‌து என‌ப‌தை கோடிக் காட்டும் நிக‌ழ்வுதான் இக்க‌தை. இவ்வாறு மாறி வ‌ரும் ச‌முக‌த்தின் மாறா பொருளாக‌ தாய்மை விள‌ங்குவதை ம‌றுத‌லிக்க‌ இய‌லாது. அந்த மாறாபொருளைத் தன‌து துன்பவியல் தடயத்தில் பேசுகிறது இக்கதை.

பின்குறிப்பு: இக்க‌தை 2002 ஆம் ஆண்டு த‌மிழ்நேச‌னில் சிறுகதைகளுக்கான த‌ங்க ப‌த‌க்க‌த்தை வென்ற‌து.

நன்றி

சினேகமுடன்

ஆர்.இராஜேஸ்

----------------------------------------------------------------------------------------

இத்தனை நாட்களுக்குப் பிறகு அவனை, அவன்தான் ‘முகுந்தனைப்’ பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லைதான். நினைவு செல்களின் ஏதோ மூலையில் மக்கி மறந்து போய், தூசு படிந்த பிம்பமாய் உருமாறியவனை, அவ்வளவு கிட்டத்தில் பார்க்கும் போது விதி வலியது என எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது. யாருடைய உறவு, இனி ஜென்மாந்திரத்துக்கு வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளினேனோ, அவனே முன்னே வந்து, “ ஹாய் லலிதா எப்படி நலமா?” என்று கையை நீட்டுகையில், மானங்கெட்ட வலது கை அன்னிச்சையாக அவன் முன்னே நீளுகிறது. இருந்தபோதிலும், சொர சொரப்பான அவனது கைத் தடங்கள் என்னுள் ஒரு கம்பளி பூச்சியின் ஊர்தலை உண்டு பண்ணியது.

பத்து வருடங்களுக்கு முன்பு, இதே கைகளை எத்தனை நாட்கள், எனது கைகளோடு கோர்த்து கொண்டு திரிந்திருப்பேன். அப்போதெல்லாம் மெத்து மெத்தென்று ஒத்தடமாய் இனித்த ஸ்பரிசம், ‘அந்த’ நிகழ்வுகளுக்கு பிறகு எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை என்பது சர்வ நிச்சயம். எப்படி இவனால் மனம் கூசாமல் ‘நலமா’ என்று கேட்க முடிகிறது. மலர துடிக்கும் அரும்பின், ஒவ்வொரு இதழ்களையும் கிள்ளி எறிந்துவிட்டு, மிச்சமாய் நிற்கும் காம்பினைப் பார்த்து நலமா? என்று கேட்பது போல் இருந்தது அவனது செய்கை. வாய் பேசாத காம்பாய்தான் நான் நின்றிருந்தேன். இனம் தெரியாத உணர்வு குழம்புகள் உள்ளுக்குள்ளே கொதித்த போதிலும், வாய் மட்டிலும் இதழ்களை இழுத்து வைத்து, வலுக்கட்டாயமாய் ஒரு புன்னகையை ஒட்டவைத்து மெலிதாய் சிரித்துவைத்தது. இந்த பத்து வருட ஆரண்ய வாசத்தில், நானும் நடிக்க கற்றுக் கொண்டேன், இப்போது சிரித்ததைப் போன்று.

நெற்றி கறுப்பு பொட்டும், வெற்று கழுத்தும் அவனது புருவங்களை ஏற இறங்க வைத்திருக்கும். நான் இன்னும் கன்னி கழியாத, தவறு ‘கன்னி கழிந்த’ முப்பத்தைந்து வயது முதிர்கன்னி என்று அவனுக்குத் தெரிந்திருக்கும். இதே வேறொரு சந்தர்ப்பத்தில் என்னைச் சந்தித்திருந்தால், அவனிடமிருந்து ஏளன சிரிப்பும், செறுக்கும் வெளிபட்டிருக்குமோ என்னவோ, ஆனால் இன்று சூழ்நிலையின் கைதியாய், எனது உதவிவை நாடி, வெகு பிரபலமான குழந்தைகளுக்கான இரத்த புற்று நோய் நிபுணர் டாக்டர் லலிதா சுப்ரமணியத்ததைத் தேடி வரும் போது, அவனது கண்களில் தயக்கமும் குற்ற உணர்வும் கலவையாய் மின்னின. எனது கண்களை பார்த்து பேச தைரியம் இல்லாது ஸ்திரமற்ற வெற்று பார்வையை சுவற்றின் மேல் அளைய விட்டான். என்னுடைய இருப்பையும், பதவியையும் அங்கீகாரத்தையும் மௌனமாய் கிரகித்தது போல், “என் மகள் ஷாமளியைப் பத்தி கொஞ்சம் பேசனும் லலிதா, ஸாரி டாக்டர் லலிதா. நேத்துதான் கூலிம் ஆஸ்பிட்டலிருந்து இங்கே லூக்கிமியா வார்ட்டுக்கு மாத்தியிருக்காங்க.” முகுந்தனின் கண்கள் தானகவே, தாழ்ந்துக் கொண்டது.அவன் சொல்லாமலே பல விஷயங்கள் அப்போதுதான் எனக்கு பட்டென்று புரியலாயிற்று.

நேற்றைய வார்ட் ரவுண்டின் போது, புதிதாக அட்மிட் ஆன ஐந்தாம் நம்பர் பெட் குழந்தை ஷாமளி, முகுந்தனின் மகள் என்பது நெற்றியில் அடித்தாற் போல் இப்போது புலப்படுகிறது. சம்பந்தப் பட்ட குழந்தையின் பெற்றோரை என்னை காண வரும்படி, தாதியிடம் தகவல் சொன்னது லேசாய் மண்டைக்கு உறைக்கின்றது.மனதில் மூண்டிருந்த வன்மம் சட்டென்று மறைந்து, ஒரு வித பரிதாபம்தான் எஞ்சி நிற்கிறது. பழைய லலிதாவை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, டாக்டர் லலிதாவாய் அவனைப் பார்த்தேன்.“மிஸ்டர் முகுந்தன், நீங்களும் ஒரு டாக்டர் என்பதால், ஷாமளியைப் பற்றின நிலைமை ஒரளவுக்காவது புரிஞ்சிருக்கனும்னு நினைக்கிறேன்.”ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான்.“கூலிம் ஆஸ்பிட்டல் டாக்டர் தந்த ரிப்போர்ட்டின்படி பார்த்தா, உங்க குழந்தைக்கு, அனேகமா ‘அக்கியூட் லுக்கிமியா’ இருக்கலாம்னு நினைக்கிறேன்.......சட்டென்று, தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேசையில் சாய்ந்துக் கொண்டான். எந்தவொரு சப்தங்களும் கண்ணீரும் இன்றி அவனது துக்கமும் கேவலும் அப்பட்டமாய் தெரிந்தது.“கொஞ்சம் பொறுங்க மிஸ்டர் முகுந்தன், இது என்னுடைய யூகமே தவிர இன்னும் சரியா நிருபணம் ஆகல. இதுவரை கிடைச்ச இரத்த பரிசோதனையில, ஷாமளி இரத்தத்துல அளவுக்கு அதிகமான வெள்ளை அனுக்கள் இருக்கு, அதோட ரெட் ப்ளாட் செல்லும் பேலெட்லட்டும் ரொம்ப கம்மியா இருக்கு. இந்த லேப் ரிப்போட்டும், உங்கள் மகளோட உடம்பில தென்படுகிற அறிகுறிகள் அனைத்தையும் பார்க்கிறப்ப, லுக்கிமியாவாக இருக்குகூடிய வாய்ப்புக்களை அதிகப் படுத்தது.”“இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் பண்ணிட்டா, என்ன வியாதின்னு துல்லியமா கண்டுபிடிச்சுரலாம். பேஷன்னுக்கு நாளைக்கு ‘போன் மேரோவ் அஸ்பிரேஷன்’ (Bone Marrow Aspiration) பண்ணி, எலும்பிலேர்ந்து மஜ்ஜை திசுக்களை எடுத்து பரிசோதனை பண்ணனும். அதன் பிறகுதான் என்னால உறுதியான முடிவு சொல்ல முடியும். நாளைக்கு பண்ணபோற பரிசோதனை கொஞ்சம் ரிஸ்க்கானதாலே, உங்களோட சம்மதமும், கையெழுத்தும் வேணும். அதுக்காகதான் உங்கள கூப்பிட்டேன்.”கண்களில் திரண்டிருந்த துளிகளை, எனக்கு தெரியாமல் மறைக்க எத்துணை பிரயத்தனம் பட்டாலும், மடை திறந்த வெள்ளமாய் அவனது கன்னமேட்டை நனைத்தது. வெகு சோர்வாக, தளர்ந்த உடலுடன் அவன் எனது அறையை விட்டு வெளியேறுகையில், எனது மனம் பதைபதைத்தது.என்னுள், வழக்கமாய் நிறைந்திருக்கும் உத்வேகமும், சுறு சுறுப்பும் சட்டென வடிந்து, மனம் கனமாகி போனதாய் உணர்ந்தேன்.

குஷன் இருக்கையில் என்னை சாய்த்துக் கொண்டேன். பட்டு போன மரத்தில் பால் வடிவது போல், என்னுள் பஸ்பமான பழைய நினைவுகள் , காற்றசைவில் மிதக்கும் காற்றாடியைப் போல் மெல்ல தவழ்ந்து நிகழ் காலத்தை மறைத்தது. இதே கோலாலம்பூரிலுள்ள அரசாங்க மருத்துவ கல்லூரியில்தான், நானும் முகுந்தனும் எங்களது மருத்துவ படிப்பைத் தொடங்கினோம். முகுந்தவன் என்னைவிட இரண்டு வருட சீனியர். நான் முதலாம் ஆண்டு மருத்துவ கல்வியில் கால் வைத்தபோது, ரேகிங்கில் என்ற பெயரில் என்னையே வட்டமிட்டு எனது கவனத்தை ஈர்த்தான். அதுவரையில் கன்னி மாடத்தில் வாசம் புரிந்த எனது பெண்மைக்கு என்னையே சுற்றி வந்த அவனது மென்மையான ஆண்மை புதியதாகவும் உவகையாகவும் பட்டது. உணர்ச்சிகள் அரும்பி வெடிக்கும் பதிம வயதில் இந்த பரஸ்பர எதிர் பால் ஈர்ப்பு மிக சுலபமாய் என்னை அவனிடத்தில் கட்டிப் போட்டதில் வியப்பில்லை.

காதலோடு பல நாட்கள், ஊடலோடு சில நாட்கள் என நாட்கள் ஓடி போனதில் எனது ஐந்து வருட மருத்துவ படிப்பும் முடிந்து, கோலாலம்பூர் மருத்துவமனையிலே முகுந்தனோடு பயிற்சி மருத்துவராக நியமனமும் கிடைத்தது.முதலில் வார்த்தைகளோடு விளையாடிய காதல், சின்ன சின்ன தீண்டல்களாய், ஸ்பரிசங்களாய் மலர்ந்து, பிறகு தொடுதலே காதலாகி போனது. மருத்துவமனையிலும், ஆய்வு கூடங்களிலும் உடலையும், அதன் அனைத்து அவயங்களையும் பார்த்து பார்த்து, உடம்பைப் பற்றிய பிரக்ஞையே என்னை விட்டு சென்றது. கற்பென்பது வெறும் உடலை சம்பந்தபடுத்திய சாமாச்சாரமாக தோன்றியது. ஆகையால் அதை மீறுவது அத்துனை முக்கியமானது இல்லை என்று எனக்குள் முடிவு பண்ணிக் கொண்டேன். அந்த கணத்தில் புரட்ச்சிகரமாக தோன்றிய எண்ண விழுது, படித்த செறுக்கினால் உருவாகிய வக்கிர விதை, பின்னாளில் எத்துணை பெரிய விளைவுகளை என்னுள் நிகழ்த்தும் என்பது அப்போது தெரியவில்லை. எனது சுயத்தை இழந்து, அவனுள் முழ்கினேன், அவன் என்னுள் கரைந்து போனான். முகுந்தனோடு சுமார் மூன்று மாதங்கள் மனைவியாகவே வாழ்ந்தேன் என்று சொல்லவதில் வெட்கபடவில்லை. அந்த மூன்று மாதங்கள் முன்பனி காலமாய், காதலின் வசந்தத்தைப் பறைச் சாற்றும் கட்டியமாகதான் அப்போது எனக்கு தோன்றியது. வசந்தத்தின் விளைவால், வழக்கமான மாதபோக்கு தள்ளிபோனபோதுதான், எனக்குள் பூத்ததை அறிந்தேன்.
“ஹேய் முகுந், ‘யூரின் பெரக்னென்ஸி டெஸ்ட்’ பொஸட்டிவ் காட்டுது”
“என்னது?”
“நான் கர்பமா இருக்கேன். இப்பவாவது புரியுதா?“
“ஏய்,நீ என்ன விளையாடறியா?”
“நீ விளையாடிட்டு, இப்ப என்னை குற்றம் சொல்லறியா? முதல்ல உங்க வீட்டுல பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க? இன்னும் அதிக நாள் ஆயிட்ட விஷயம் அம்பலம் ஆயிடும்.”
வேறு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவனில் முக ஓட்டத்தைக் கண்டு எனது பேச்சு தடைப் பட்டது.
“என்ன யோசனை முகுந்?”
“என்ன டாக்டர் நீ? கொஞ்சம் கவனமா இருந்திருந்தா பிரச்சனையே இல்லாம இருந்திருக்கும். உனக்குதான் என்ன பண்ணனும்னு தெரியுமே? இது ரொம்ப ஆரம்ப கட்டம்தான், அதனால கர்ப்பபையில கரு இன்னும் ஒழுங்க வளர்திருக்காது. ஏதாவது மருந்து சாப்பிட்டு அபார்ஷன் பண்ணிக்க வேண்டியதுதானே?”
அவனது அபத்தனமான பேச்சினாலும் அல்பமான புத்தியாலும், எனது முகம் கோபத்தினால் சிவந்தது.இத்தனை நாள் மனதுக்குள் ஊடோடியிருந்த அன்னியோனியம் பட்டென்று அறுந்தது போல் இருந்தது, அவனது கொடுரமான வார்த்தைகளை கேட்டபோது. சற்று ஆசுவாசம் அடைந்தவனாய், எனது அருகே வந்து எனது தலை கோதிவிட்ட படியே, பெரிய பாரங்கல்லை எனது தலையில் போடுவான் என்று எதிர்பார்க்கவே வில்லை
“இதோ பாரு லலிதா, நானும் நீயும் கல்யாணம் செஞ்சி ஒன்னும் ஆகபோறது இல்லை. நீயும் நானும் இதே கவர்மென் ஆஸ்பிட்டல்ல வேலை செஞ்சி முன்னேற முடியுங்கிறதெல்லாம் நடக்காத காரியம்.”
எனக்கு மூச்சு பேச்சு இன்றி நாக்கு மேலண்ணத்தில் ஓட்டிக் கொண்டது.
“அதனால, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என்னோட மாமா கூலிம்ல சொந்தமா கிளினிக் வச்சி ரொம்ப சிறப்ப இருக்காரு. அவரோட மகளை, எனக்கு திருமணம் பண்ணி வைக்க விரும்பறாரு. நல்லா யோசனை பண்ணதுல, இதுதான் எனக்கும் நல்லதுன்னு தோனுது. அதனாலே நான் அங்கேயே போறாத இருக்கேன். நீயும் யாராவது பெரிய ஸ்பெஷலிஸ்ட் டாக்டாரோ இல்ல பணக்காரனோ பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. உன் அழகுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம்.” அவன் கூறி முடித்த கணத்தில், எனது மொத்த உயிரும் போயிருக்க கூடாதா எனத் தோன்றியது.

உண்டு முடித்தவுடன் கைகளைத் துடைத்துக் கொள்வது போல், எப்படி அவனால் என்னை நிராகரிக்க முடிந்தது என்ற துக்கமே எனது எத்தனையோ இரவு தூக்கங்களைக் தொலைத்திருந்தது. அவன் தின்று முடித்த எனது இளமைகளின் எச்சத்தைக் காணும் போதெல்லாம் என் மனது தாங்கவென அசூசையும் அறுவருப்பும் கொள்ளும். உடம்பு என்பது உள்ளத்தோடு கூடிய அபூர்வ சேர்க்கையென்று அப்பொழுதுதான் உணர முடிந்தது. கற்பு நெறி பண்பெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல என புரிய தொடங்கியது. அன்று மனதில் விழுந்த ஆழமான காயங்கள்தான், என்னை இன்னும் கன்னியாகுமாரியாக நிற்க வைத்திருகிறது. அந்த நினைவுளை இன்று அசை போடும் போது, எத்துணை முட்டாள்தனமாக, உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு மனமும் உடலும் சிதைந்து போன அவலம் மனதில் நிழலாய் படருகிறது.

“டாக்டர், நீங்க கேட்ட ஷாமளியோட ப்ளாட் ரிசால்ட் ரெடியா இருக்குது.”நர்ஸின் குரல், எனது ஆழ்ந்த மோனத்தை உடைத்து, இயல்புக்குக் கொண்டு வந்தது. அந்த பரிசோதனை முடிவுகளை ஒரு முறை நோட்டம் விட்டபோது, உள்ளே ஒரு பட்சி சோகமாக கூவியது.மறுநாள் காலை, எலும்பு மஜ்ஜைகளை எடுக்க வேண்டி, அந்த குழந்தையைக் பரிசோதிக்கையில், எனது மனதில் அமிழ்ந்து கிடந்த தாய்மை சுனையாய் ஊறியது. இந்நேரம், எனக்கும் முகுந்தனுக்கும் திருமணம் ஆகியிருந்தால், இந்த ஷாமளி எனது மணிவயிற்றில் பிறந்து, எனது முலைக்காம்புகளில் பால் உறிஞ்சி, என் நெஞ்சோடு உறவாட வேண்டியவள். இன்று விதியின் கோலத்தால், அவளே என் கைகளில் பிஞ்சு நோயாளியாக......

தேவையில்லாத எண்ணங்களின் தாக்குதலினால், சற்று நேரம் ஸ்தம்பித்து போனேன். மனதை சுருட்டி, ஓர் ஓரத்தில் கடாசிவிட்டு, எனது பணிகளைத் தொடர்ந்தேன்.எலும்பு கூடாய் இருந்த குழந்தையைக் குப்புற போட்டு. இடுப்பின் அடிபகுதியில், துளையிட வேண்டிய இடத்தை “அல்கோஹலினால்” சுத்தம் செய்தேன். இடுப்பு பகுதியை மரத்து போக வைத்து, ஓர் ஊசியை, மெல்ல எலும்பினுள் சொருகி திருகினேன். மீண்டும் இன்னொரு ஊசியை அதனுள் சொருகி, எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜை திதுசுக்களை ஒரு வாறாக உறிஞ்சி எடுத்தேன். குழந்தையின் கைகளையும் கால்களையும் நர்ஸ் பிடித்துக் கொண்டாலும், தீனமான குரலில் அழும் சத்தம் என்னுள் கசிவை உண்டு பண்ணியது. வலியினால் முனகும், ஷாமளியை வாரிக் கொண்டு முகுந்தன் அழுத போது, அன்று நான் வடித்த கண்ணீர்துளிகளை நினைத்து பார்க்கிறேன். நம்பியவனிடம் மோசம் போய், அங்கீகாரமற்ற கருவைத் தாங்கி கொண்டு நின்ற வேதனையை சொல்லி மாளாது. ஊர் உலகத்துக்கு பயந்து, என் உயிரில் பூத்த முதல் பூவைக் கசக்கியபோது, எனது பெண்மையும் தாய்மையும் அன்றோடு அழிந்து போனது. முகங் காணாத எனது மூன்று மாத கரு, எனது காதலின் சின்னம், சதைபிண்டமாய் இரத்தக் கட்டிகளாய் வெளியே விழுந்தபோது என்னுள் எழுந்த ஒப்பாரி இன்னும் எனது ஒலித்து கொண்டே இருக்கின்றது. இன்று விதியின் கோலத்தை காணும்போது, சிரிப்புதான் வருகிறது. அன்றும் இப்படிதானே உலகத்தைக் காண துடித்த எனது சிசுவுக்காக அழுதிருப்பேன். இதைதான் விதி கை கொட்டி சிரிக்கின்றது என்று சொல்வார்களோ?

அழுது கொண்டிருந்தவன், எனது கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு“எப்படியாவது என் ஷமளியை காப்பாத்திடு லலிதா” என்று கேவும் போது“நீ என்னுடைய கருவை கொன்ன மாதிரி, நிச்சயமா நான் அப்படி செய்யமாட்டேன். இது என்னோட தொழில், என் தர்மம், இந்த கைகளுக்குக் காப்பாற்றதான் முடியுமே தவிர, அழிக்கறதுக்கு என்னைக்கு முன் வராது. ஒரு முறை அழிச்சதே இந்த ஜென்மத்துக்கும் போதும்.”மனதுக்குள் சொல்லிக் கொண்டேனே ஒழிய, எதுவும் கூறாது முகுந்தனின் கைகளை லேசாக வருடி விட்டு சென்றேன்.நான் நினைத்தது போலவே, எலும்பு மஜ்ஜையின் பரிசோதனை முடிவு, ஷாமளிக்குப் பாதகமாகவே வந்திருந்தது. மனதில் சஞ்சல அலைகள் புரள, திரண்ட கரு மேகங்கள் கண்களைக் கவ்வின.

என்னுடைய சுய இயல்பினை இழந்து, எதற்காக ஷாமளியை நினத்து கலங்க வேண்டும்? இந்த குழந்தையைப் போன்று எத்தனையோ சிசுக்குகளுக்குச் சிகிச்சை அளித்தபோது ஏற்படாத அவஸ்தை, இன்று அதிசயமாக பெருக்கெடுப்பது எதனால்? ஷாமளியின்பால் கொண்ட தாய் பாசமா? அல்ல தன்னை ஒரு காலத்தில் காதலித்தவன் துன்படுகையில் மூளுகிற பரிதவிப்பா? இதில் எதுவென்று புரியாமல் தடுமாறுகையில், கதவை தட்டி உள்ளே நுழைந்தான் முகுந்தன்.அவனை காண திராணியற்று கண்கள் தாழ்கையில், எனது பணியும் அதன் தர்மமும் முன்னே வந்து பழைய லலிதாவை தள்ளி வைத்து, டாக்டர் லலிதாவாய் நிமிர்ந்தேன். ஸ்திரமற்று அலைந்துகொண்டிருந்த அவனது கண்களை காணும் போது, நெஞ்சு கனத்தது.“வெல், மிஸ்டர் முகுந்தன், ஆக கடைசியா பன்ணின பரிசோதனையில உங்க மகளுக்கு ‘அக்கியூட் லிம்போ•பளாஸ்டிக் லுக்கிமியா டைப் எல் 1’ன்னு (Acute Lymphoblastic Leukemia type L1) கன்போ•ம் ஆயிருக்கு. வியாதியோட கண்டிஷனைப் பார்க்குபோது, இன்னும் காப்பாத்தகூடிய வாய்ப்பு நிறைய இருக்கு. மேலும் காலத்தைக் கடத்தாமல், நாளைக்கே கிமோதெரபி ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க வீணா மனசை போட்டு குழப்பிக்க வேண்டாம், இந்த கேஸ்ல, பிழைக்ககூடிய வாய்ப்பு அதிக பட்சமா இருக்கு. இது மாதிரி பிள்ளைங்க, இங்கேர்ந்து நல்லப்டியா தேறி போயிருக்காங்க.”பிரக்ஞையற்று அமர்ந்திருந்த முகுந்தனின், வறண்ட முகத்தில் நம்பிக்கை மின்னல் கண நேரத்தில் வெட்டியது.“புற்றுநோய்யுங்கிறது குணபடுத்த முடியாதது இல்லை முகுந்தன். வெளியில இந்த நோயைப் பற்றி தப்பான பிம்பம் இருந்தாலும், ஒழுங்கான கண்காணிப்பும் சுத்தி உள்ளவங்களோட இடைவிடாத ஆதரவும் ஊக்கமும் இருந்தா குணமாவது நிச்சயம். ஒரு டாக்டரான உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை.”

அன்றைய பொழுதிலிருந்து, ஷாமளிக்குக் கிமோதெரபி வழங்கி, இரத்ததை உற்பத்தி செய்யும் அணுக்களை நுணுக்கமாக பரிசோதித்து, நல்ல அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி விட்டேன். இடைபட்ட ஒருமாத காலத்தில், தோல் போர்த்திய எலும்பு கூடாய் இருந்தவள், எனது பிரத்தியோக கண்காணிப்பால் உடல் தேறி, கன்னங்குழியெல்லாம் சதை பற்று உண்டானது. ஷாமளியைப் பூரணமாக குணமாக்கி ஒப்படைக்கும் போது, எனது உள்ளம் கொண்ட உவகையும் மகிழ்சியும் சொல்லிக் கட்டாது. என்றோ ஒரு நாள், எனது மூலஸ்தானத்தில் தங்கிய கருவை உயிருடன் பெற்று எடுத்த நிம்மதியைக் கொடுத்தது.ஷாமளியோடு முகுந்தன் வீடு திரும்பும் போது,“என்னை மன்னிச்சிடு லலிதா” இமைகளின் ஓரத்தில் அரும்பிய கண்ணீர், விழிக் குளத்தில் அலம்பியது. “நன்றி சொல்ல வேண்டிய நேரத்துல, மன்னிப்பு எதுக்கு முகுந்?” பழைய அன்னியோனியம் எனது குரலில் தெரிந்தது. இதில் சத்தியமாக காதலனை அழைக்கும் உருக்கம் இல்லை. தவறு செய்து திருந்தி வந்த நண்பனை எதிர்கொள்ளும் பாவமே மிகுந்திருந்தது.

“நீ ரொம்ப பெரிய மனுஷி... இதுக்கு மேலே என்னால சொல்லமுடியல.” சப்தங்கள் தொண்டைக்குழியின் நாலபக்கமும் சிதற, வெறும் திணறல்தான் வெளிப்பட்டது.“மன்னிக்க தெரிஞ்சவன்தான் மனுஷன் முகுந். நான் மனுஷனாகவே இருக்க ஆசைபடறேன். நல்லபடியா போய் வா.”அவன் சென்ற தடங்களையே பார்த்துக் கொண்டிருகிறேன். மனம் மட்டிலும் எதற்கு ஓட்டாததது போல் அன்னிச்சையாக முனகியது.“நீ பண்ண தப்பை எப்பவோ ஞாபகத்திலேர்ந்து கழற்றி வைச்சுட்டேன் முகுந். நான் பண்ணின பெரிய தப்பை, என் மடியில ஜனித்த முதல் அரும்பைக் கலச்சதுதான் இன்னும் மறக்கமுடியல. உன்னை மன்னிச்ச மாதிரி, என்னால என்னை மன்னிக்கமுடியலையே முகுந். இந்த குற்றவுணர்ச்சி மனசுல இருக்கிற வரைக்கும், எங்கிட்ட வர்ற எல்லா குழந்தைகளையும் உயிரக் கொடுத்து காப்பாத்துவேன். அப்பதான் என்னையே சுத்திக்கிட்டு இருக்கிற அந்த சின்ன ஆத்மா என்னை மன்னிக்கும்.” மனதுக்குள் வைராக்கியமாய் உணர்வுகள் மேலீட்டன.“டாக்டர், ஐந்தாம் நம்பர் பெட்டுக்கு புதுசா இன்னொரு கேஸ¤ வந்திருக்கு. மீண்டும் டாக்டர் லலிதாவாய் என் குழந்தைக்கு செய்யும் கைங்காரியமாய், ஐந்தாம் நம்பர் பெட் குழந்தையை நோக்கி நடக்க தொடங்கினேன்.

புதன், 5 டிசம்பர், 2007

தொடுவானம்

என்னுடைய நான்காண்டுகால லண்டன் வாசத்தில், ஏதாவது தமிழில் எழுத வேண்டும் என எண்ணி, வலிய வரைந்த கதை இது. இந்த கதை பெண்ணியத்தைப் பற்றி பேசினாலும், பெண்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகளின் ஆதாரம் ஆண்களின் ஆதிக்க மனபாண்மை என்பதை மறுக்க முடியாது.

பெண்கள் பெண்களுக்காக எழுதுவது ஆச்சரியம் இல்லைதான். அது இயல்பு. அதுவே ஆணாக இருக்கும் பட்சத்தில், ஆண்கள் பெண்ணியத்தைத் தொடும்போது, பரிவும், பதைபதைப்பும், சற்று கூடுதலான அக்கறையும் இருக்கும் என நம்புகிறேன். ஏன்னா இன்னைக்கு இருக்கும் Gynaecologist ‍list- இல் (பெண்மை பிணியியல் மற்றும் மகப் பேறு நிபுணர்கள்) பெரும்பான்மை ஆண்களே வகிக்கிறார்கள். இது ஆண்கள், பெண்களின்பால் வைத்திருக்கும் இயற்கையான பற்றுதலையும் பரிவையும் புரிய வைக்கிறது.

ஒர் ஆண்ணென்ற‌ அறிதலின் பேரில் பெண்க‌ளைப் ப‌ற்றி புரிந்துக் கொள்ள‌ நான் எடுத்துக் கொண்ட‌ முத‌ல் முய‌ற்சி.

பின்குறிப்பு: இந்த கதை 2003-ஆம் ஆண்டு மக்கள் ஓசையில் வெளியீடு கண்டது

ந‌ன்றி

சினேக‌முட‌ன்

ஆர்.இராஜேஸ்
-------------------------------------------------------------------------------



லண்டன் ஹீத்தூரோ விமான நிலையத்தில், தனது முதல் காலடியை, அந்நிய மண்ணில் ஊன்றிய பொழுது- நிவேதாவின் அடி வயிறு கலங்கி ஏதோ இனம் காணாத மருட்சி கண்களில் அடைக்கலமாகியது. யாருமற்ற தனிமையில், வரவேற்க ஏவருமில்லாத ஸ்திதியில், தனது உடைமைகளைப் பெற்றுக் கொண்டு, டாக்சிக்குக் காத்திருக்கும் தருணம் கொடுமையானது. வெள்ளைக்கார டாக்சியோட்டிக்குத், தான் செல்ல வேண்டிய இடத்தினை விளக்குவதற்குள், நிவேதாவிற்கு மூச்சு முட்டியது. இளங்காலை வேளையில், சூரியன் இன்னும் பனிபடலங்களின் இருந்து முழுவதும் விடுப்படாத நிலையில், குளிர்காற்று மேனி முழுவதையும் ஊசியாய் துளைத்தது. தோளில் மாட்டியிருந்த, தோல்பையை நெஞ்சோடு இறுக அணைத்து, தனக்கு தானே வெம்மையை ஏற்படுத்துக் கொண்டாள். இலையில்லா மொட்டை மரங்கள், பின்னோக்கி ஓடுவதையும், காற்றில் நூல் பிரிய பறக்கும் தனது முடிக் கற்றைகளை ஒதுக்கி கொண்டும், தனது வெற்று பார்வையை வெளியே சிதறவிட்டாள்.
எத்துணை பிரயத்தனப்பட்டு மனதை அடக்கினாலும், நெருக்கிய பிடியிலிருந்து நழுவி ஓடும் சின்னக் குழந்தையாய் அது அவளை விட்டு வெகுதூரம் விலகி சென்றது. இலை உதிர்ந்து, வெறும் குச்சிக் கூடுகளாய் காட்சியளிக்கும் மரங்களைத் தாண்டும் போதெல்லாம், மனது மளுக்கென்று உடைந்து, சரக்கென்று நீர்த் திவலைகள் தெறிப்பதைத் த‌விர்க்கமுடியவில்லை. அம்மாவை நினைக்கும் போதெல்லாம், நெஞ்சுக்குழி ஏறியிறங்கி, துக்கம் பந்தாய் தொண்டையை அடைக்கிறது. இந்த தள்ளாத வயதில், அவளை நிராதரவாய் அண்ணனிடம் ஒரு வேலைக்காரியாய் ஒப்படைத்து வருகையில், இருதயமே ஈரக்குலையிருந்து அறுந்து கீழே விழுந்தது. தனக்கு இருந்த ஒற்றை ஆதரவும், தனியே பிரிந்து, கடல் தாண்டி போகையில், சற்றும் கலங்காமல் நெஞ்சுரத்தோடு போய் வா என்று சொன்ன அம்மாவின் கண்களில் படிந்திருந்த சோகமும் பிரிவுத் துயரும், நிவேதாவின் கண்ணீர் சுரபிகளைத் துரிதமாக்கியது. தாயைப் பிரிந்து, தாய் மண்ணைப் பிரிந்து, எங்கோ வெகுதூரம் செல்ல வேண்டிய நிர்பந்தம்தான் என்ன? அதை நிவேதாவிடமே கேட்டு விடுவோமே....
நிவேதா....எனக்குன்னு அழகா அமைஞ்சது இந்த பேரு மட்டும்தான். மத்தவங்கெல்லாம் என்னை அழகின்னு சொன்னபோது, கர்வப்பட்டது எவ்வளவு அபத்தம்ன்னு இப்ப அழறபோது தெரியுது. எனக்கு நினைவு தெரிஞ்சி, என் குடும்பத்துல மூனே பேர்தான், நான், அம்மா அப்புறம் அண்ணன். எல்லோரையும் போலத்தான் என்னோட சின்ன வயசும் துள்ளலோடும், குதியலோடும், கஷ்டங்கள் என்னவென்று தெரியாத விளையாட்டு பருவத்துல கழிஞ்சது. இங்க, நான் முக்கியமா சொல்ல வேண்டியது, எங்க அண்ணன் குணாவைப் பத்திதான். என்னதான், நான் அவனுக்கு ஒரே தங்கச்சியாய் என்றபோதிலும், அதுவென்னவோ என்மேல அவனுக்கு அப்படியாப்பட்ட வெறுப்பு. நான் எங்க அம்மாவைப் போல, நல்லா கலரா இருப்பேன். கோதுமை நிறத்துல வெண்ணையை கலந்தாப்பல அப்படி ஒரு நிறம். இதற்கு நேர்மாறா குணா, நிறத்துல அப்பாவை போலவாம், கொஞ்சம் கறுப்பா (ரொம்பவே) அசமஞ்சமா இருப்பான். இந்த நிற வேற்றுமைதான் எங்களிடையே ஒரு பிரிவை உண்டு பண்ணியிருக்கனும். அதோட மட்டுமல்லாமல், படிப்புல நான் முதலாவதுன்னா, குணா கடைசிக்கு முதலாவதா இருப்பான். சின்ன வயசிலேர்ந்து, எனக்கும் அவனுக்கும் என்னைக்கும் ஏழாம் பொருத்தம்தான். முதல்ல பெரிசா தெரியாத இந்த வேற்றுமை, நாங்க வளர வளர எங்களுக்குள்ளே ஒரு தடுப்பு சுவரை உண்டு பண்ணியது என்னவோ சர்வ நிச்சயம்.ஒற்றை பெண்பிள்ளையென்று, அம்மா என்னைக் கொஞ்சி வளர்த்தது அவனுக்கு பொறுக்கவில்லை போலும். அம்மா என்னை மட்டிலும் உயர்வாய் பாசமாய் செல்லமாய் கவனிப்பது போன்ற பிரம்மையை அவனுக்குள் உருவாக்கியதில் வியப்பில்லை. போததிற்க்கு, வீட்டுக்கு முதல் ஆண்பிள்ளை பொறுப்புக்களைச் சுமப்பதில் அவனுக்கு ஏகப்பட்ட கரிச்சல். எங்கேயாவது, கல்யாண சுபநிகழ்சிகளுக்குக் குடும்பத்தோடு சேர்ந்து போகும் போது, மற்றவர்கள் எழுப்பி விடுகின்ற விமர்சனங்கள், குணாவை இன்னும் உசுப்பி விட்டதில் தப்பில்லை.
“அட இது உங்க மகனா? என்று யாராவது மாமி கேட்டு, அம்மா தலையாட்டினால் விஷயம் அதோடு முடிந்திருக்கும். பிறகு கூடவே,
“நீங்க நல்ல தக்காளி நிறமா, மூக்கும் முழியுமா இருக்கீங்க, உங்க மகளும் அச்சு அசலா உங்க ஜாடை, அதான் கேட்டேன்.” கல்யாணத்திற்கு வந்திருக்கும் மாமி எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவாள்.“இல்ல, அவன் அவங்க அப்பா மாதிரி”.
என்று அம்மா சிரித்து வைத்த போதிலும், நடுவில் இருக்கும் குணாவிற்கு முகமெல்லாம் சிவந்து கோபமும் அவமானமும் புருபுருவென நடு மண்டைக்கு ஏறும்.புகைமூட்டங்களுக்கு இடையே தெரியும் பிம்பங்களைப் போலதான் எங்களது உறவும் இருந்தது. ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தோம் என்று சொல்வதை விட, தனி தனி தீவாய் ஒதுங்கி இருந்தோம் என்று சொல்வதே மெத்த பொருத்தம்.
இந்த விலகல் படலம் எனக்கு புரியவில்லை என்று சொல்வதைவிட நான் அதை இலட்சியபடுத்தவில்லை என்பேதே உண்மை. அந்த இருபத்து நான்கு வயதின் இளமைமையும், தாதிமை தொழிலும் எனக்கு வீட்டில் நடக்கும் பனிப்போரைப் புலப்படுத்தவில்லை.அண்ணனைப் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு, என்னைப் பற்றி, அந்த இருபத்துநான்கு வயது அழகு நிலா-நிவேதாவைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் போனால் எப்படி? எனது இளமைக் காலங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வது சற்று கூச்சமாகவும், அதே சமயம் மீண்டும் அந்த வயதில் திளைத்த ஆனந்தத்தையும் எனக்கு தருகிறது. எதை ஆனந்தம், சந்தோஷம் சொர்கம் என்று முதலில் நினைக்கிறோமோ, அதுவே பின்னாளில் துன்பமாய், அதன் நினைவே நரக வேதனையாய் சில பேர்களுக்கு வாய்த்து விடுகிறது. அப்படியாப்பட்ட துரதிஷ்டசாலிகளில் நானும் ஒருத்தி!!!!!உடலில் பூத்திருக்கும் இளமை, எனது லாவண்யத்தை மெருகேற்றி புடம்போட்டிருந்த பருவமது. முதன் முறையாக தாதிமை பயிற்சியை முடித்து, தனியார் மருத்தவமனையில் தாதியாய் வேலையில் அமர்ந்த சமயம். மனதில் சந்தோஷங்களே நிரம்பி, கைநிறைய வருமானமும், முகம் வழிய சிரிப்பும் கும்மாளமுமாய் கழிந்த இளவேனில் காலம்.
அந்த காலகட்டத்தில், சராசரியாய் ஒரு பொண்ணுக்கு என்ன நடந்திருக்கும் என்று யாராலும் சுலபமாய் ஊகிக்க முடியும்.எனது சந்தோஷங்களைத், தோஷங்களாக்கி, என்னை மூலையில் முடக்கி போட்டது காதல் என்னும் மாயப் பிசாசு. நான் வேலை செய்யும் மருத்துவமனையில், டாக்டராக பணிப்புரியும் சிவாதான் எனது இளமை பிணிக்கு மருந்தாய் இருந்தவர். இன்று நினைத்துப் பார்க்கும் பொழுது, எதனை அடிப்படையாக கொண்டு சிவாவின் மீது எனக்கு காதல், தப்பு காதல் என்று சொல்வதை விட ஈர்ப்பு வந்தது? என்று விடை காண முடியவில்லை. கொப்பளித்து ததும்பி வழியும் இளமைக்கு வடிகாலாய்தான் சிவா அமைந்தாரா என்ற வினா இன்னும் எனது மண்டையைக் குடைகிறது.சிவாவின் கல்யாண குணங்களை நன்கு அறியாமல். அவரின் ஒவ்வொரு செய்கைக்கும் நடுவில் ஒளிந்திருக்கும் சூட்சுமங்களைச் சரியாக புரிந்துக் கொள்ளாமல், அவருக்கு கழுத்தை நீட்டியது எவ்வளவு தப்பு என்று பட்ட பின்பு புரிகிறது.
காதலிக்கும் போது, நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நினைவு கூறுகிறேன். ஏதோ ஒரு மருத்தவமனையைச் சார்ந்த விழாவில், என் சக தாதி தோழியின் கணவரிடம் குலுங்கி சிரித்து பழகியது, சிவாவின் முகத்தை அந்த அளவுக்கு கோரமாக்கும் என நப்பவில்லை. விழா நடக்கும் போதே, எனது கையை பிடித்து தர தரவென இழுத்து காருக்கு கொண்டு போய், பளாரென கன்னம் பழுக்க அறைந்தது, இன்னும் நினைவில் இருக்கின்றது. நான் பிரமைப் பிடித்து நிற்கையில்,எனது கையை இறுக அணைத்துக் கொண்டு,
“ஸாரி நிவேதா.....நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். நீ மத்தவங்ககிட்ட சிரிச்சி பேசறதை கூட என்னால பொறுத்துக்க முடியாது. நீ எனக்கு வேணும். எனக்கு மட்டும்தான் வேண்டும் ....ஐ லவ் யூ வெரி மச்...” என்று பிணாத்திய போது,ரோஷம் பொங்க, குறைந்தபட்சம் ஏசியாவது இருக்க வேண்டும். ஆனால் காதல் மயக்கம் என்பார்களே, அது அப்படியே என்னை முயக்கி,‘என் மேல என்னவொரு வெறித்தனமான அன்பிருந்தா, நான் மத்தவங்க கிட்ட சிரிச்சி பேசறதுகூட சிவாவால தாங்கிக்க முடியல. என் மேல அவ்வளவு காதலா?’ என்ற கோணத்தில்தான் எனது சிந்தனைகள் சென்றன. பிறகென்ன, ஒரு நல்ல முகூர்த்த நாளில், இரு தரப்பு சம்மதங்களோடு எங்கள் கல்யாணம் நடந்தேறியது. ஏற்கனவே என்னை எட்டிக் காயாய் நினைக்கும் குணா, இப்போது கண் நிறைந்த டாக்டரை கணவராக கொண்டதில் இன்னும் துவேஷம் கூடி போய், அடியோடு விலகி விட்டான்.எல்லா புதுமண பெண்களை போன்றுதான், என்னுடைய இல்லற வாழ்க்கையும் மிக இனிமையாக ஆரம்பித்தது. என்னையே சதா காலமும் சுற்றி வரும் அன்பு கணவன் என்று மிகவும் பூரித்து போனேன். ஆனால், யாருக்குதான் இன்பம் தொடர்கதையாய் இருந்ததாக வரலாறு உள்ளது?
எனது வாழ்வின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் சமாதியாக்க குழி தோண்டப்படுவது பிறகுதான் உறைத்தது. மொத்தமாய் எனது உடலை, உள்ளத்தை, ஆசைகளை குத்தகைக்கு எடுத்ததுபோல் அவர் நடந்துக் கொள்ளும் போதுதான், இல்லற வாழ்க்கையின் மறுப்பக்கம் எனக்கு மெல்ல புரிந்தது. சிவாவின் ஒட்டு மொத்த ஆளுமை, ‘பொஸஸிவ்னஸ்’ வெளிச்சத்திற்கு வந்த போது, அடி மேல் அடியாய் அமைந்த சம்பவங்கள் என்னை நிலை குலைத்தன. எந்த நேரமும் அவரை, அவரை மட்டிலும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று குறியாய் இருந்தார்.அதற்கு தடையாய் எனது தாதிமை உத்தியோகம் இருப்பது அவரது கண்ணை உறுத்தியது போலும். சிவா என்னிடம் வேலையிலிருந்து விலகுமாறு சொன்னபோதுதான், எங்களிடையே முதற்சண்டை வலுத்தது.“இப்ப வேலையை விட்டு நிக்கற அளவுக்கு என்ன அவசியம் சிவா.”“முதல்ல கட்டின புருஷன, பெயரைச் சொல்லி கூப்பிடறத நிறுத்து. புருஷன்னு ஒரு மதிப்பும் மரியாதையும் வேண்டாம். சிவாவின் மற்றும் ஒரு புதிய முகம் எனக்கு லேசாய் பிரசன்னமாயிற்று.
“கல்யாணத்துக்கு முந்தி நீ எப்படி வேணுமாலும் இருந்திருக்கலாம், இப்ப நீ ஒரு டாக்டரோட பொண்டாட்டி. கண்ட கண்ட ஆம்பிள்ளைங்க கூட இழிச்சி சிரிச்சி பேசிறது எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கல.”“நான் ஒரு நர்ஸ்,அவங்க என்னோட பேஷண்ட், ஒரு டாக்டரா இருந்துக்கிட்டு நீங்களே இப்படி புரியாம பேசலாமா?“உனக்குதான் மனைவிங்கற அந்தஸ்து புரியல. முதல்ல நீ எனக்கு பொண்டாட்டி, அப்புறம்தான் நர்ஸ், அதை புரிஞ்சிக்கோ. புருஷன் என்ன சொல்லறான்னோ அதைதான் பொண்டாட்டி கேட்கணும். உங்க வீட்டுல அதெல்லாம் சொல்லி தரலியா? “என்று ஏளன பார்வை பார்த்தபோது, எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ஒரு நீண்ட சண்டைக்குப் பிறகு, நான் எனது வேலை இராஜினாமா செய்து விட்டு, வீட்டோடு இருந்துவிட்டேன்.தமிழில் ஒரு பழமொழி உண்டு. இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காதாம். சிவாவை பார்ப்பதற்கு வருகை புரியும் அவரது சினேகிதர்களுடன் சற்று சிரித்து கல கலவென உரையாடிவிட்டால், அவரது முகம் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி ஆகிவிடும்.
“நீ இப்படி குழைஞ்சி பேசி சிரிக்கிறதால தான், அவனுங்க அடிக்கடி என்னைப் பார்க்க வர்ற சாக்குல உன்னை டாவடிகிறானுங்க” என்று சொந்த நண்பர்கள் மீதே சந்தேகம் கொள்வார்.அதன் பிறகு,“வீட்டுல உள்ள பொம்பளைங்க அடக்கமா இருந்தா, வெளியே இருந்து வர்றவன் கையெடுத்து கும்பிடுவான். உனக்கும் அடக்கத்துக்கும்தான் நூறு மைல் தூரமாச்சே. சிகப்பு தோலும், மூக்கும் முழியுமா இருந்தா மட்டும் போதாது, அச்சம் நாணம் மடம் பயிர்ப்புன்னு மத்த குணங்களும் வேணும். எங்கம்மால்லாம் வெத்து ஆம்பிள்ளைங்க முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கமாட்டங்க. இதெல்லாம் பரம்பரையிலே வரணும்.”“பாவம் உங்கம்மா .” முதல் முதலாக எனது எதிர்பைக் காட்டினேன்.
“கிண்டலா. உனக்குதான், என்னைதவிர மத்த எல்லா ஆம்பிள்ளைங்களைக் கண்டாலே இனிக்குமே.” அந்த வார்த்தைகளின் அபத்தமும் வெம்மையும் சட்டென உறைக்க, எனது பொறுமை ஒரு கணத்தில் எல்லையைத் மீறியது, ஆக்ரோஷம் கொப்பளிக்க
“ஆமாம், நான் அப்படிதான், இப்ப அதுக்கு என்ன?”
என்று சொன்னதுதான் ஞாபகம் இருந்தது. சற்று நேரம் என்ன நடக்கிறது என சுதாரித்து பார்க்கையில், முதுகு, கன்னம், காது முகமெல்லாம் வீங்கி, உதட்டோரம் சிறு கோடாய் இரத்தம் வழிந்திருந்தது. இதையெல்லாம் விட, ஆக கொடுமை என்னவென்றால், கிழிந்த நாறாய் இரத்த விளாரல்களோடு நான் முனகுகையில், ஒரு கணவராக கூட வேண்டாம், குறைந்த பட்சம் டாக்டராக இருந்து எனக்கு உதவியிருக்கவேண்டும். ஆனால், அவர் உதிர்த்து சென்ற வார்த்தைகள், அன்றோடு எனது மூன்று வருடகால இல்லற பந்தத்தை முற்றாக அறுத்துப் போட்டது.‘புருஷனக்கு அடங்காத பொண்டாட்டி, அடிப்பட்டுதான் சாகணும்.’பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும். எவ்வளவு உண்மையான கூற்று இது. எனது வேதனைகளைக் கண்டு குணா இரக்கபடாவிட்டாலும் கூட, எனது இரணத்தை இன்னும் பெரிதாக்காமல் இருக்கலாம். என்னுடைய நிலையைக் கண்டு பூரிப்பு அடைந்தானோ என்னவோ,
“நாந்தான் இரதின்னு மனசுல நினைச்சுக்கிட்டு மத்த ஆம்பிள்ளைங்ககிட்ட கொஞ்சி குலாவினா, எந்த புருஷங்காரந்தான் சும்மா இருப்பான். பொண்ணுன்னா அடக்கம் வேணும், உன்ன மாதிரி அடங்காபிடாரியெல்லாம் இப்படிதான் வாழவெட்டியா நிக்கணும். குணாவின் எகத்தாள பேச்சு, எனது மனபுண்ணில் அமிலத்தை ஊற்றியது.அம்மாவால், என்னோடு சேர்ந்துக் கொண்டு அழதான் முடிந்தது. கங்கையில் மூழ்கினாலும், சனிஸ்வரன் விட்டபாடில்லை எனக்கு.
அதுவரையின் நாலு சுவருக்குள் மூடி இருந்த எனது விவகாரம், சிவாவின் அநாகரிக செய்கையால், ஊரெல்லாம் பரவி வெளி வாசலில் தலைக் காட்ட கூட முடியாமல் செய்து விட்டது. வீட்டின் முன்னே வந்து, வாய்க்கு வந்ததையெல்லாம் யோசிக்காமல் அள்ளி தெறித்து, எனது மானம் வெட்ட வெளியில் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், ஊரில் என்ன பேச்சு தெரியுமா?‘ஒரு படிச்ச டாக்டரே இப்படி மனசொடைஞ்சி பேசறாருனா, இவ என்ன அக்கிரமம் பன்ணியிருக்கனும்.’ பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம். இத்தனை அடிகளும் போதாதென்று, குணா தலையில் ஒரேடியாய் ஒங்கி பெரிய இடியை இறக்கினான்.
“உன்னால என்னோட மானமரியாதையெல்லாம் கப்பல் ஏறுது. நீ இப்படி வாழவெட்டியாய், தண்டசோறு தின்னுகிட்டு இருந்தா, எனக்கு எந்த மடையன் பொண்ணு தருவான். உங்கூட இருந்தா, எனக்கு வர்ற பொண்டாட்டிக்கும் உன் குணம் ஒட்டிக்கும்......”
அவன் முடிக்கவில்லை, அதற்குள் அம்மா தாங்கா மாட்டாது வெடித்தே விட்டாள்.“டேய், மூடுறா வாயை. நீயெல்லாம் ஒரு அண்ணனுன்னு சொல்லிக்க வெட்கமா இல்ல? என் பொண்ணு சொக்க தங்கம்னு எனக்கு தெரியும். பொண்ணுங்க பொறுமையில பூமாதேவிடா, என்ன கஷ்டம், அவபேரு வந்தாலும் தாங்கிக்குவாங்கா. ஆனா, உங்களா மாதிரி ஆம்பிள்ளைங்களுக்கு, பொண்ணுங்க பொறுமையா போனா, ரொம்பதான் துளுத்து போகுது.”என்னைப் பார்த்து,
“நீ ஏண்டி கவலை படற. இந்த புருஷனும் அண்ணனும் உனக்கு ஆயுள் மட்டும் துணைக்கு வர்ற மாட்டானுங்க. உன் கையில தொழில் இருக்கு, மனசுல திடம் இருக்கு. இவனுங்க மூஞ்சியிலே முழிக்காம எங்கையாவது கண் காணாத இடத்துக்கு பொழைக்க போடியம்மா.”அன்றோடு, எல்லா நிகழ்வுகளையும் மனதிலிருந்து சுத்தமாய் துடைத்தெறிந்துவிட்டு, என்னையே நிதானமாக சரி செய்துக் கொண்டேன். லண்டனில் உள்ள மருத்துவமனையில், தாதியாக வேலை செய்து கொண்டே மேற்படிப்பு படிக்க இடமும் சன்மானமும் கிடைத்தது.அம்மாவை விட்டு பிரியும் போது மனம் நெகிழ்தது.
“என்னை பத்தி கவலை படாதடி செல்லம். உங்கண்ணனுக்கும், அவனுக்கு வர்ற போற பொண்டாட்டிக்கும் எப்படியும் வீட்டு வேலைகளை செய்யறத்துக்கு வேலைக்காரி தேவைப்படும், அது நானாக இருந்துட்டு போறேன். நீ தளர்ந்திடாதே, இவனுகளுக்கு முன்னே நீ தலை நிமிர்ந்து நிக்கனும். நல்லபடியா போய்ட்டு வாடி என் கண்ணு.” இவ்வளவுதான் என்னோட பழைய கதை. இந்த எல்லா அமர்களமும் ஓய்ஞ்ச பிறகு கூட, என்னால இன்னும் சில கேள்விகளுக்கு விடை காண முடியல. என் கணவரோட அதிகப்பட்ச ஆளுமையை, நல்ல படிச்ச என்னால, ஏன் ஆரம்பகட்டதிலே எதிர்க்கமுடியல? கணவனே கண் கண்ட தெய்வம்ன்னு சொல்லி வளர்த்த, வாழ்க்கை முறை என் அறிவை பிசக்கி அடிமையாய் வாழ நிர்பந்த படுத்தியதா?ஆனால், காரணம் எதுவா இருந்தா என்ன? இனியொரு முறை எனது அறிவை அடகு வைக்ககூடதுன்னு மனசுக்குள்ள வைராக்கியம் மூளுது. துன்பங்களும் சோதனைகளும் தொடுவானம் மாதிரி, முடிவது போல தோற்றம் அளிச்சாலும் நீண்டு கொண்டேதான் போகும். அதுக்காக தேங்கி நின்னற கூடாது, தொடுவானத்தை துரத்துற பட்சியா ஒடிக்கிட்டே இருக்கனும். நான், இப்பதான் ஓடவே ஆரம்பிச்சிருக்கேன், நீங்க.....?

திங்கள், 3 டிசம்பர், 2007

கலையாத கனவுகள்

என்னுடைய பதிம வயதில் எழுதிய கதை இது. நிஜம் முக்காலும் கற்பனை காலும் சேர்ந்த கலவை. தோட்டபுற வாழ்வியலில், உயர்வைக் காண விழையும் ஒரு சிறுவனின் அவஸ்தையும், அவனது பெற்றோர்களின் ஆவலாதியும்தான் இந்த கதையின் சாராம்சம்.
எட்டு வருடங்களுக்கு பிறகு, இந்த கதையை நானே ஒப்பிட்டு பார்க்கிறபோது, இது வெகு சாதாரண கதையாகவும் சம்பவங்களின் தொகுப்பாக இருந்தபோதிலும், இதில் ஆவணப்படுத்தபடும் தோட்ட மக்களின் சிக்கல் மிகுந்த அன்றாட நிலையைச் சுட்டிக் காட்டவே இதனை மீண்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
இது வெறும் கதை மட்டிலும் அல்ல, ஒரு தோட்ட பாட்டாளி மகனின் நிதர்சன வாழ்க்கையும் கூட‌.
பின் குறிப்பு:‍‍‍ 1999 ஆண்டின் மலேசிய தேசிய ப‌ல்கலைகழக (UKM) தமிழ் சிறுகதை போட்டியில், இந்த கதை முதல் பரிசை வென்றுள்ளது.
நன்றி

சினேகமுடன்
ஆர்.இராஜேஸ்

-----------------------------------------------------------------------------------------

இதயத்தின் லப் டப் ஓசை வினாடிக்கு ஒரு தரம் அதிகரித்துக் கொண்டே போனது. உடலெங்கும் ஒரு மின்சார அலை ஊர்வது போன்று உதறத் தொடங்கியது. நேற்றைய இரவு, எட்டு மணி செய்தியை வானோலியில் கேட்டதில் இருந்து, மனது ஒர் இடத்தில் நிலைக் கொள்ளவில்லை. உள்ளே இருக்கும் அர்த்தம் தெரியாத அவஸ்த்தையை அடக்கவும் தெரியாமல், வெளியே துப்பவும் முடியாமல் மண்டை கிறு கிறுத்தது.“அட யாருடா இவன், குட்டி போட்ட பூனை கணக்கா நடை பழகறவன். நாளைக்குதானே எஸ்.பி.எம் பரீட்ச்சை ரிசால்ட்டு வெளியே வருதுன்னு ரேடியாவுல சொன்னான். அதுக்கு ஏன் இன்னைக்கே கிடந்து தவிக்கிற? பரீட்சையை ஒழுங்கா எழுதினவன் எதுக்கு அல்லாடுனும்”. சமையலுக்குக் கீரையை ஆய்ந்துக் கொண்டிருந்த செல்வத்தின் அம்மா தனலட்சுமி, அவனது நிலையை அறியாது குரல் கொடுத்தாள்.“கொஞ்ச நேரம் சும்மா இரேம்மா. நீ நாளைய கறிக்கு இன்னைக்கே கீரையை சுத்தம் பண்ணி வைக்கிலையா? அது மாதிரிதான் இதுவும். சும்மா தொண தொணன்னு பேசி தொந்தரவு பண்ணாதே”. செல்வத்தின் குரலில் எரிச்சல் வழிந்தது.அன்றைய பொழுது, நத்தையாய் மெல்ல நகர்ந்து கண் உறங்கா இரவாய் விடிந்தது. செல்வம் வசிக்கும் தோட்டத்தில் அவனையும் தவிர்த்து, இன்னும் மூன்று நான்கு அவனையத்த மாணவர்கள், எஸ்.பி.எம் பரீட்ச்சையை எழுதியிருந்தனர். அவர்களுக்குப் பரீட்ச்சையை எழுதும் போதே, அதன் முடிவு தெரிந்து விட்டது போலும், ஆளுக்கு ஒரு வேலையை தேடிக் கொண்டு மூலைக்கு ஒருவராய் நகர்ந்து விட்டனர். படிப்பின் மீது அரைகுறை அக்கறை கொண்டவர்கள் கூட, காசைக் கண்டதும், மீதி இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையையும் மூழ்கடித்து விட்டனர். பிள்ளைகள், இப்பொழுதே, சம்பாதித்து கொடுப்பது அவர்களது பெற்றோர்களுக்கும் உவப்பாய்தான் இருந்தது. வருங்காலத்தின் உண்மையான நிதர்சனத்தைப் புரிந்துக் கொள்ளாமல், நாளை என்ற பொழுதை மறந்து , உடனுக்குடன் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் மட்டுமே பெரிதாய் பட்டதுஇத்தனைக்கும் மத்தியில், செல்வம் நம்பிக்கையுடன்தான் இருந்தான். பி.எம்.ஆர் தேர்வில் பள்ளியிலே முதலாவதாய் தேறியவனுக்கு, எஸ்.பி.எம் சோதனையில் எப்படியும் வென்று விடலாம் என்ற அசைக்க முடியாத எண்ணம் அடி மனது வரை இருந்தது. மேலும் மெருகேற்றி படித்த பாடங்கள், தன்னைக் கைவிடாது என்று முழுக்க நம்பினான். இதற்கு சான்றாக, ஒவ்வொரு முறையும் பள்ளி தவணை பரீட்ச்சைகளில் அவனுக்கு கணிசமான புள்ளிகளே கிடைத்து, அவனை முதலாம் இடத்தில் உட்கார வைத்தன. அதுமட்டுமல்லாது, தமிழ் மொழியிலும் உயிரியல்(பயோலோஜி) பாடத்திலும் செல்வத்தை தவிர அதிகமான புள்ளிகளை மற்றவர் யாரும் பெற்றதில்லை. அந்த அளவிற்கு அவனது பெயர் அவ்விரு பாடங்களிலும் பிரசித்தம். அவனது நெஞ்சம் முழுவதும் வியாபித்திருந்த எதிர்கால ஆசைகளே அவனை பேய் மாதிரி படிக்க வைத்தது. தோட்ட புறத்திலிருந்து தலை தூக்கி, எப்படியாவது முன்னிலைக்கு வர வேண்டும் என்ற வெறியும் கூட இருந்தது. அதற்கேற்றாற்போல் சிறு பிராயத்திலிருந்தே, மருத்துவராக வேண்டும் எனும் ஆசை மனதில் முளையிட்டு , இன்று கொப்பும் குலையும்மாய் கிளை விட்டு விருட்சமாய் பரவியிருந்தது. இதயெல்லாம் விட, சாமானிய தோட்ட தொழிலாளிகளான அவனது பெற்றோர்களும், அவனுக்கு மிகவும் அனுசரனையாக இருந்ததுதான் அதிசயம். மற்ற பிள்ளைகளைப் போன்று, செல்வத்தை இரப்பர் நிறைக்கு உதவியாய் கூப்பிடாமல், அவனுக்குப் படிப்பதற்குத் தேவையான நேரத்தையும் வசதியையும் செய்துக் கொடுத்தனர். இந்த சிறப்பு சலுகைகளுக்காகவே செல்வத்தின் தம்பிகள், அம்மா தனலட்சுமியோடு மல்லுக்கு நிற்பார்கள். “இனிமேல், எங்கலால மரம் வெட்ட ஒண்டியா வரமுடியாது. நாங்கள் கஷ்டப்பட்டு மரம்சீவி, கிளாஸ் துடைச்சி, பால் எடுகிறப்ப, அண்ணன் மட்டும் சொகுசா காலை ஆட்டிகிட்டு வீட்டுல இருக்கான். அவனும் மரத்துக்கு வரட்டும்”. என்று மற்ற தம்பிகள் சண்டித்தனம் செய்வார்கள். அம்மா தனலட்சுமி இப்படி சமாதனம் செய்வாள்.“ஏண்டா அண்ணங்கிட்ட மல்லுக்கு நிக்கறிங்க. அவனுக்கு இந்த வருஷம் எஸ்.பி.எம் பரீட்ச்சை, அதுக்கு நிறையா படிக்கணும்மேடா. அண்ணன் ஒழுங்கா படிச்சி பரீட்ச்சையில பாஸ் பண்ணாதானே உங்கள எல்லாம் நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும்”.இப்படி அம்மா தனலட்சுமி தேனாய் பேசியபோதும், தம்பிகள் செல்வத்தை வில்லனைப் பார்ப்பது போல்தான் முறைத்துவிட்டு போவார்கள். அம்மா ஒரு புறம் அவன் படிப்பிற்குச் சாமரம் வீசினால், அப்பா இராமசாமியோ மறுபக்கம் அவனுக்கு வேண்டியதையெல்லாம் செய்துகொண்டே போவார். கல்வி என்று வரும்போது, அவர் கொஞ்சம் கூட கஞ்சதனம் காட்டவில்லை. செல்வத்தின் படிப்பு செலவிற்கோ அல்லது புத்தகத்திற்கோ இல்லை என்று சொல்லாமல், எங்கேயாவது கடன் வாங்கியோ அல்லது நகையை அடமானம் வைத்தோ அவனது தேவைகளைத் தீர்த்து வைத்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்.செல்வத்தின் எஸ்.பி.எம் சோதனை கட்டணம் கூட, அவனது அம்மாவின் தங்க சங்கிலியைப் பாசாக் கடையில் அடகு வைத்த பணத்தில்தான் கட்டப்பட்டது. என்ன செய்வது? தோட்ட பாட்டாளிகளுக்குச், சம்பள நாளிலிருந்து முதல் ஐந்து நாட்களுக்குதான் கையில் காசு புழங்குகிறது. பாடுபட்டு ஈட்டி வரும் பணம் உணவுக்கு, மளிகை கடை கடனை அடைக்கவும் மீந்தது பாசக்கடையில் மீளாதுயிலில் இருக்கும் நகைகளை மீட்கவும்தான் சரியாக இருக்கிறது. பிறகு மாத நடுவிலோ அல்லது கடைசியிலோ பணமுடை நேரும்போது, ஆபத்பாந்தவனாக விளங்கும் பாசாக்கடையில் மீண்டும் நகையை அடகுவைத்து மிச்ச நாட்களையும் கழிக்க நேரிடுகிறது. இதெல்லாம் இங்கு மிகவும் பழக்கபட்ட வழக்கங்கள்தான். இதையெல்லாம் விட கொடுமை, பத்து வட்டிக்கும், பதினைந்து வட்டிக்கும் கடன் வாங்குவதுதான். இந்த கடனையெல்லாம் இவர்களால் சம்பாதித்து அடைக்கமுடியாது, ஆயுசு முழுவதும் வட்டிக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஏதோ அதிர்ஷ்டவசமாக லாட்டரியில் பரிசு விழுந்தால்தான் அசலையே கட்டமுடியும். இவ்வாறு இருக்கும் தோட்ட சூழ்நிலையின் மத்தியில், ஆடம்பர செலவு செய்யாது, சம்பளத்தில் ஒரு பகுதியில் கூட்டு கட்டி, நகைமணிகளை சேர்க்காமல், கல்விக்காக தயங்காமல் செலவிடும் இவர்கள் சற்று வித்தியாசமனவர்கள்தான். இத்துணை சிரமப் பட்டு உழைத்து, குருவி மாதிரி ஒழ்வொரு காசாய் சேர்த்து, தனது படிப்பிற்காக அத்தனையும் அர்பணிக்கும் பெற்றோர்களுக்குத் தான் என்ன கைங்காரியம் செய்தாலும் தீராது என்று செல்வத்திற்குத் தெரியும். தனக்காக படிக்காவிட்டலும் கூட, இவர்களுக்காக தான் படிக்க வேண்டுமே என்ற பிரக்ஞையே அவனை பல சமயங்களில் அலைக் கழிக்கும். இவர்களது அப்பழுக்கற்ற தியாகத்திற்காவது, தான் சிறந்த முறையில் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற உத்வேகம் மிக தீவிரமாய் பரவும்.அந்த நினைவிலேயே தன்னை நிறுத்தி, இரண்டு வருட பாடங்களைக் கரைத்து குடித்து, அத்தனையும் இரண்டே மணி நேரத்தில் கொட்டிய அழகு இன்று தெரிய போகிறது. என்னதான், மனதுக்குள் திடமும் நம்பிக்கையும் கொட்டிக் கிடந்தாலும், ஏதோ ஸ்திரமற்ற பயம் அடிவயிற்றைப் பிசைய செய்தது.காலையிலே குளித்து முடித்து, இரப்பர் நிறைக்குச் சென்ற தாயும் தந்தையும் வரும்வரை காத்திருந்தான். பரீட்ச்சை முடிவுகளைக் காண்பதற்கு முன் பெற்றோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கு முனைந்திருந்தான்.இரப்பர் நிறையில், மரம் சீவிக்கொண்டிருந்த தனலட்சுமிக்கு, மனது ஒரு நிலையில் நிற்கவில்லை. நேற்றைய பொழுதில் இருந்து, மகன் செல்வம் படும் வேதனையப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். வீட்டிலே வளைய வளைய வரும் பிள்ளை, சதா நேரமும் தன்னிடம் வம்புக்கு நிற்கும் வளர்ந்துவிட்ட குழந்தையான செல்வத்தின் அவஸ்த்தையைக் கண்டு பெற்ற மனம் பாடாய் பட்டது. அவருக்கும் ஒருவித திகில் இல்லாமல் இல்லை. போததிற்குப் பக்கத்து வீட்டு துளசியக்கா கூறியது மனதில் நின்று கிலேசத்தை உண்டு பண்ணியது. நேற்றைய சம்பாஷனை மீண்டும் மனதுக்குள் சாயாங்கால நிழலாய் வளர்ந்தது,“துளசியக்கா, தேங்காய் ஓன்னு இருந்தா கொடுங்களேன். நா¨ளைக்கு அப்பதுக்குத் துவையல் அரைக்கணும். காலங்கார்த்தால நம்ம செல்வம் ஸ்கூலுக்கு போகணும், அதுக்குதான்”.“ஆமாண்டியம்மா, நாளைக்கு என்னமோ ரீசால்ட்டு வருதுன்னு, ரேடியாவுல இளமைக்கும் இனிமைக்கும் இடையில சொன்னாங்களே, அதுவா தனம்?”“அட ஆமாக்கா, இந்த வருஷம் என் மூத்தமவன் எஸ்.பி.எம் பரீட்ச்சை எழுதியிருக்கான்லே, அதோட முடிவு நாளைக்குக் காலையில வருதாம். அதுக்கோசரம், இவன் பித்து புடிச்சி போய், இராத்திரிக்கு ஒன்னுமே சாப்பிடாம முடங்கி கிடக்கிறான். நாளைக்குக் காலையிலயாவது, நாலு தோசையைச் சாப்புட்டு தெம்பா ஸ்கூலுக்கு போகட்டும்”“ம்ம்....., நீங்களும் கடன உடன வாங்கி புள்ளைகள படிக்க வைக்கரீங்க, பாஸ் பண்ணா சரி. ஏன் சொல்லறேன்னா, நம்ம பிள்ளைங்க என்னாதான் கஷ்டப்பட்டு படிச்சாலும், மலாயில கவுந்துறங்கலாம். போன வருஷம், நம்ம ஜைத்தோன் பையன் இஸ்மாயில் கூட, மலாயிலதான் பெயிலாயிட்டானாம். மலாய்க்கார பிள்ளைங்களே அவங்க பாடத்துல தவறபோது, நம்ம பிள்ளைங்க எம்மாத்திரம்? ஏதோ கடவுள் உன் பிள்ளை விஷயத்துல கண்ண தொறந்தா சரி”.ஒழுங்காக இருந்த மனதை துளசியக்கா குழப்பியதிலிருந்து, தனத்திற்கு தலையில் நண்டு பிறாண்டியது. என்னதான் வெளியே மகனுக்குத் தைரியம் சொன்னாலும், அவளுக்குள் அந்த விஷயம் உறுத்தாமல் இல்லை. செல்வத்திற்கு இருந்த அவஸ்தைகள் அத்தனையும் தனத்திற்கு ஒட்டிக்கொண்டு, அவளை மந்தப்படுத்தியது. சேற்று குட்டையாய் கலங்கிய மனது, உற்சாகத்தைக் குறைத்து வேலையில் சுணக்கத்தை ஏற்படுத்தியது.“ஏய் தனம் என்னாச்சு உனக்கு, ஒத்த மரத்த ஒம்போது மணி நேரமா சீவிக்கிட்டு இருக்க, மரத்துக்கு வலிச்சிடப் போகுது. நிறையை வெள்ளன முடிச்சாதானே, வீட்டுக்கு போயி ஒரு வாய் சோறு சாப்பிட முடியும்”. அவளது சுணக்கத்தைக் கண்டு கணவர் இராமசாமி நையாண்டி செய்தது அவளுக்கு இரசிக்கவில்லை போலும். “ஆமாய்யா, நீ தின்னறதுலே இரு. எனக்கு ஒரு பருக்கை சோறு உள்ள இறங்கலை. இன்னைக்கு நம்ம செல்வத்தோட ரிசால்டு வருதுன்னு, நம்மள வீட்டு சுருக்கா வர சொல்லியிருக்கான். என்ன ஆகுமோ, எது ஆகுமோன்னு நான் வயித்துக்குள்ளே நெருப்ப கட்டிகிட்டு அவதி படறேன், உனக்கு நையாண்டியா இருக்கா?“அடிப் போடி அறிவு கெட்டவளே, பரீட்ச்சை முடிவு வருதுன்னா, கொஞ்சம் அப்படி இப்படி பயமாதான் இருக்கும் குழந்தைக்கு. நாமதான் நாலு நல்ல வார்த்தைங்கள சொல்லி அதுகள தேத்தனும், அதவுட்டுபுட்டு நீயே புள்ளைக்கு பயம் காட்டறியே”.“அதுக்கில்லைங்க, ஒரு பேச்சுக்கு சொல்லறேன்- பரீட்ச்சை முடிவுல ஏதாவது விபரீதம் ஆயிடுச்சுனா, நம்ம பையன் கதி என்னதுக்கு ஆவறது? அத நினைச்சாதான் நெஞ்சுக்குள்ள கப்புன்னு அடைக்குது”. தனதிற்கு சற்று நேரத்தில் கண்கள் பட்டென கலங்கிவிட்டது.“ஏண்டி உனக்கு மட்டும் ஏன் புத்தி இப்படியெல்லாம் யோசனைப் பண்ணுது. நம்மளே, நம்ம குழந்தைகள குறைச்சி எடை போடலாமா? செல்வம் எவ்வளவு கஷ்டப்பட்டு கண் முழிச்சி இராத்திரியும் பகலுமா படிச்சிருக்கான்னு உனக்கே தெரியுமல்ல?“சரி, அப்படியே ஏதாவது ஏடாகூடமா நடந்தா மட்டும் தலையா போயிடபோகுது. இன்னோரு வாட்டி பரீட்ச்சை எழுதி பாஸ் பண்ண முடியாதா என்ன? அப்பங்காரன் நான் மலைமாதிரி இருக்கறவரைக்கும் எம்மவன படிக்க வைப்பேண்டி. என்னைதான் எங்கப்பன் வசதியில்லையின்னு படிக்கவைக்காம கித்தா மரத்து கூட்டியாந்துட்டாரு. எம்மவனுக்கு என்னடி குறை, அவன ராஜா மாதிரி படிக்கவைக்கறேன்னா பாரு”.இப்படி பேசிக்கொண்டே, முழு இரப்பர் நிறையையும் சீவி முடித்து விட்டனர். பிள்ளை வீட்டில் காத்திருக்கிறான் என்ற எண்ணமே அவர்களை இன்னும் துரிதப்படுத்தியது.“இதோ பாரு தனம், வீட்டுக்கு போயி செல்வத்துக்கிட்டே நல்ல வார்த்தையா பார்த்து பேசு. நாம உழைச்ச உழைப்புக்கும், கேட்டப்பல்லாம் நகையை கழட்டி கொடுத்த உன் மகராசி குணத்துக்கும், கண்டிபா நம்ம மவன் பரீட்ச்சையில பாஸ் பண்ணுவான். நம்ம தோட்டத்து அம்மன் என்னைக்கும் நம்மள கைவிடமாட்டா”.செல்வத்துக்கு, தனது பெற்றோர்களைக் கண்டதும், மனம் இன்னும் நெகிழ்ந்து போனது. தனம் விறு விறுவென கையும் காலையும் கழுவிக் கொண்டு தோசைகளை சுட சுட வார்த்து போட்டாள். செல்வத்தைக் கூப்பிட்டு ஆதரவாய் அமர்த்தி பசியாறவைத்தாள். செல்வத்திற்கு நாபியிலிருந்து மெல்லிய உணர்வு நெஞ்சமெங்கும் விரவி தொண்டைக்குழியை அடைத்தது.“பகவானே, இவங்களுக்காவது என்ன நல்ல படியா தேர்ச்சியடைய வை” என்று மனது உள்ளுக்குள் ஓலமிட்டது. இத்தனை நாள், தான் விழுந்து எழுந்து படித்த கர்வமெல்லாம் நொறுங்கி போய், தன்னம்பிக்கை தகர்ந்து போய், தேவையற்ற பயம் அவனது புத்தியை மழுங்கடித்தது. அறிவு நிலைக் கொள்ளாது அலையும்போதுதான், சின்ன சின்ன பயங்களும், கிலேசங்களும் புத்தியை ஆக்கிரமித்து அல்ப விஷயங்களை கூட விஸ்வரூபம் தரிக்க செய்து, மனிதனை அலைகழிக்கின்றன. அப்பேர்ப்பட்ட சூழ்நிலையின் கெடுபிடிக்குள், செல்வம் வலுக்கட்டாயமாய் தள்ளப்பட்டான்.சைக்கிளை மிதித்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பும் போது,“அண்ண, ஓல் த பெஸ்ட்”. இத்தனை நாள் முறைத்துக் கொண்டுந்த தம்பிகூட வாழ்த்திவழியனுப்பினான்.சோதனை முடிவுகளை வெளியிடும் அறையை எட்டியதும், கால்கள் இரண்டும் கனமாகி ,கைகள் செயலிழந்து போயின. சிரித்துக் கொண்டு மலர்ச்சியாய் சிலரும், தோய்ந்த முகத்தோடு பலரும், ஒரு சில மாணவிகள் அழுதுக் கொண்டும் அறையிலிருந்து வெளியேறினர். இத்தனை நிகழ்வுகளைப் பார்த்ததில், பள்ளியின் தலைமையாசிரியர் அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்ததுகூட அவனுக்கு தெரியவில்லை. அவனது தோளைத் தட்டி, தலையையாசிரியர், சோதனை முடிவு சீட்டைக் கொடுத்ததும், கண்களை இறுக மூடிக் கொண்டான். இறுதயமே வெளியே வந்து விழுவதைப் போல், அதிவேகமாய் துடித்தது.ஒரு கணம் அவனை நிதானித்து பார்த்த பள்ளி தலைமையாசிரியர்,“வாழ்த்துக்கள் செல்வம். மாவட்டத்திலே நீதான் மிகச் சிறந்த மாணவனாய் தேர்ச்சியடைஞ்சிருக்க”. தலைமையாசிரியார் அவனது கைகளைப் பற்றி குலுக்கினார். “எல்லா பாடத்திலும் ஏ எடுத்திருக்க, நம்ம பள்ளியில இதுமாதிரி யாரும் இதுவரைக்கும் எடுத்தது கிடையாது. காங்கிராட்ஸ்”. இன்னொரு ஆசியர் அவனை பாரட்டினார். விஷயம் அதற்க்குள் பரவி அனைத்து ஆசிரியர்களும், நண்பர்களும் திரண்டு விட்டனர். செல்வத்திற்கு அழுகை கண்களை முட்டிக் கொண்டு, கண்ணாடியாய் பளபளத்தது. இறுகிய பாறையாய் அல்லாடிய மனது, இலவம் பஞ்சு கணக்காய் மிதக்க தொடங்கியது. தன்னை சூழ்ந்திருந்த அத்தனை கூட்டத்தையும் பொருட்படுத்தாது, தனது சைக்கிளை நோக்கி ஓடத்தொடங்கினான். அத்தனை பேர்களின் புருவங்களும் அவனது செய்கையைக் கண்டு மேலேறின. என்ன ஆயிடுச்சு இவனுக்கு?இவர்களுக்கு எங்கே புரிய போகிறது? தன் வீட்டு வாசலில் நெஞ்சு நிறைய நம்பிக்கைகளை புதைத்துக் கொண்டு அவஸ்தையோடு காத்திருக்கும் அன்பு உள்ளங்களை நோக்கிதான் ஓடுகிறான் என்று.