என்னுடைய மருத்துவ கல்லூரியின் காலத்தில் போது உருவான கதை இது. பெண்மையும் தாய்மையும் ஆண்களுக்குச் சுயமாக அமையாவிட்டாலும்கூட, அதனை உணரும் வல்லமை நிச்சயம் அவர்களுக்கு உண்டு. அந்த உந்துதலின் பேரில், என்னை மீறி எழுதிய கதைகளில் இதுவும் ஒன்று.
இந்த கதைக்கான பொறி ஒரு கருகலைப்பு சம்பவம். ஆனால் அதன் நிகழ்வும் தாக்கமும் எனது கற்பனையும் கற்பிதங்களையும் தாண்டி, தன்னை ஒரு படிவமாக ஸ்தாபித்து கொண்டன.
மாறி வரும் சமூதாயத்தில் கற்புநெறி கோட்பாடுகள் தளர்ந்தும் மாற்றப்பட்டும் வருகின்றன. தனிமனித அளவில் அதன் மாற்றங்கள் மனித குணாதிசயங்களை எவ்வாறு பீடிக்கிறது எனபதை கோடிக் காட்டும் நிகழ்வுதான் இக்கதை. இவ்வாறு மாறி வரும் சமுகத்தின் மாறா பொருளாக தாய்மை விளங்குவதை மறுதலிக்க இயலாது. அந்த மாறாபொருளைத் தனது துன்பவியல் தடயத்தில் பேசுகிறது இக்கதை.
பின்குறிப்பு: இக்கதை 2002 ஆம் ஆண்டு தமிழ்நேசனில் சிறுகதைகளுக்கான தங்க பதக்கத்தை வென்றது.
நன்றி
சினேகமுடன்
ஆர்.இராஜேஸ்
----------------------------------------------------------------------------------------இத்தனை நாட்களுக்குப் பிறகு அவனை, அவன்தான் ‘முகுந்தனைப்’ பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லைதான். நினைவு செல்களின் ஏதோ மூலையில் மக்கி மறந்து போய், தூசு படிந்த பிம்பமாய் உருமாறியவனை, அவ்வளவு கிட்டத்தில் பார்க்கும் போது விதி வலியது என எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வந்தது. யாருடைய உறவு, இனி ஜென்மாந்திரத்துக்கு வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளினேனோ, அவனே முன்னே வந்து, “ ஹாய் லலிதா எப்படி நலமா?” என்று கையை நீட்டுகையில், மானங்கெட்ட வலது கை அன்னிச்சையாக அவன் முன்னே நீளுகிறது. இருந்தபோதிலும், சொர சொரப்பான அவனது கைத் தடங்கள் என்னுள் ஒரு கம்பளி பூச்சியின் ஊர்தலை உண்டு பண்ணியது.
பத்து வருடங்களுக்கு முன்பு, இதே கைகளை எத்தனை நாட்கள், எனது கைகளோடு கோர்த்து கொண்டு திரிந்திருப்பேன். அப்போதெல்லாம் மெத்து மெத்தென்று ஒத்தடமாய் இனித்த ஸ்பரிசம், ‘அந்த’ நிகழ்வுகளுக்கு பிறகு எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை என்பது சர்வ நிச்சயம். எப்படி இவனால் மனம் கூசாமல் ‘நலமா’ என்று கேட்க முடிகிறது. மலர துடிக்கும் அரும்பின், ஒவ்வொரு இதழ்களையும் கிள்ளி எறிந்துவிட்டு, மிச்சமாய் நிற்கும் காம்பினைப் பார்த்து நலமா? என்று கேட்பது போல் இருந்தது அவனது செய்கை. வாய் பேசாத காம்பாய்தான் நான் நின்றிருந்தேன். இனம் தெரியாத உணர்வு குழம்புகள் உள்ளுக்குள்ளே கொதித்த போதிலும், வாய் மட்டிலும் இதழ்களை இழுத்து வைத்து, வலுக்கட்டாயமாய் ஒரு புன்னகையை ஒட்டவைத்து மெலிதாய் சிரித்துவைத்தது. இந்த பத்து வருட ஆரண்ய வாசத்தில், நானும் நடிக்க கற்றுக் கொண்டேன், இப்போது சிரித்ததைப் போன்று.
நெற்றி கறுப்பு பொட்டும், வெற்று கழுத்தும் அவனது புருவங்களை ஏற இறங்க வைத்திருக்கும். நான் இன்னும் கன்னி கழியாத, தவறு ‘கன்னி கழிந்த’ முப்பத்தைந்து வயது முதிர்கன்னி என்று அவனுக்குத் தெரிந்திருக்கும். இதே வேறொரு சந்தர்ப்பத்தில் என்னைச் சந்தித்திருந்தால், அவனிடமிருந்து ஏளன சிரிப்பும், செறுக்கும் வெளிபட்டிருக்குமோ என்னவோ, ஆனால் இன்று சூழ்நிலையின் கைதியாய், எனது உதவிவை நாடி, வெகு பிரபலமான குழந்தைகளுக்கான இரத்த புற்று நோய் நிபுணர் டாக்டர் லலிதா சுப்ரமணியத்ததைத் தேடி வரும் போது, அவனது கண்களில் தயக்கமும் குற்ற உணர்வும் கலவையாய் மின்னின. எனது கண்களை பார்த்து பேச தைரியம் இல்லாது ஸ்திரமற்ற வெற்று பார்வையை சுவற்றின் மேல் அளைய விட்டான். என்னுடைய இருப்பையும், பதவியையும் அங்கீகாரத்தையும் மௌனமாய் கிரகித்தது போல், “என் மகள் ஷாமளியைப் பத்தி கொஞ்சம் பேசனும் லலிதா, ஸாரி டாக்டர் லலிதா. நேத்துதான் கூலிம் ஆஸ்பிட்டலிருந்து இங்கே லூக்கிமியா வார்ட்டுக்கு மாத்தியிருக்காங்க.” முகுந்தனின் கண்கள் தானகவே, தாழ்ந்துக் கொண்டது.அவன் சொல்லாமலே பல விஷயங்கள் அப்போதுதான் எனக்கு பட்டென்று புரியலாயிற்று.
நேற்றைய வார்ட் ரவுண்டின் போது, புதிதாக அட்மிட் ஆன ஐந்தாம் நம்பர் பெட் குழந்தை ஷாமளி, முகுந்தனின் மகள் என்பது நெற்றியில் அடித்தாற் போல் இப்போது புலப்படுகிறது. சம்பந்தப் பட்ட குழந்தையின் பெற்றோரை என்னை காண வரும்படி, தாதியிடம் தகவல் சொன்னது லேசாய் மண்டைக்கு உறைக்கின்றது.மனதில் மூண்டிருந்த வன்மம் சட்டென்று மறைந்து, ஒரு வித பரிதாபம்தான் எஞ்சி நிற்கிறது. பழைய லலிதாவை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு, டாக்டர் லலிதாவாய் அவனைப் பார்த்தேன்.“மிஸ்டர் முகுந்தன், நீங்களும் ஒரு டாக்டர் என்பதால், ஷாமளியைப் பற்றின நிலைமை ஒரளவுக்காவது புரிஞ்சிருக்கனும்னு நினைக்கிறேன்.”ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான்.“கூலிம் ஆஸ்பிட்டல் டாக்டர் தந்த ரிப்போர்ட்டின்படி பார்த்தா, உங்க குழந்தைக்கு, அனேகமா ‘அக்கியூட் லுக்கிமியா’ இருக்கலாம்னு நினைக்கிறேன்.......சட்டென்று, தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேசையில் சாய்ந்துக் கொண்டான். எந்தவொரு சப்தங்களும் கண்ணீரும் இன்றி அவனது துக்கமும் கேவலும் அப்பட்டமாய் தெரிந்தது.“கொஞ்சம் பொறுங்க மிஸ்டர் முகுந்தன், இது என்னுடைய யூகமே தவிர இன்னும் சரியா நிருபணம் ஆகல. இதுவரை கிடைச்ச இரத்த பரிசோதனையில, ஷாமளி இரத்தத்துல அளவுக்கு அதிகமான வெள்ளை அனுக்கள் இருக்கு, அதோட ரெட் ப்ளாட் செல்லும் பேலெட்லட்டும் ரொம்ப கம்மியா இருக்கு. இந்த லேப் ரிப்போட்டும், உங்கள் மகளோட உடம்பில தென்படுகிற அறிகுறிகள் அனைத்தையும் பார்க்கிறப்ப, லுக்கிமியாவாக இருக்குகூடிய வாய்ப்புக்களை அதிகப் படுத்தது.”“இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் பண்ணிட்டா, என்ன வியாதின்னு துல்லியமா கண்டுபிடிச்சுரலாம். பேஷன்னுக்கு நாளைக்கு ‘போன் மேரோவ் அஸ்பிரேஷன்’ (Bone Marrow Aspiration) பண்ணி, எலும்பிலேர்ந்து மஜ்ஜை திசுக்களை எடுத்து பரிசோதனை பண்ணனும். அதன் பிறகுதான் என்னால உறுதியான முடிவு சொல்ல முடியும். நாளைக்கு பண்ணபோற பரிசோதனை கொஞ்சம் ரிஸ்க்கானதாலே, உங்களோட சம்மதமும், கையெழுத்தும் வேணும். அதுக்காகதான் உங்கள கூப்பிட்டேன்.”கண்களில் திரண்டிருந்த துளிகளை, எனக்கு தெரியாமல் மறைக்க எத்துணை பிரயத்தனம் பட்டாலும், மடை திறந்த வெள்ளமாய் அவனது கன்னமேட்டை நனைத்தது. வெகு சோர்வாக, தளர்ந்த உடலுடன் அவன் எனது அறையை விட்டு வெளியேறுகையில், எனது மனம் பதைபதைத்தது.என்னுள், வழக்கமாய் நிறைந்திருக்கும் உத்வேகமும், சுறு சுறுப்பும் சட்டென வடிந்து, மனம் கனமாகி போனதாய் உணர்ந்தேன்.
குஷன் இருக்கையில் என்னை சாய்த்துக் கொண்டேன். பட்டு போன மரத்தில் பால் வடிவது போல், என்னுள் பஸ்பமான பழைய நினைவுகள் , காற்றசைவில் மிதக்கும் காற்றாடியைப் போல் மெல்ல தவழ்ந்து நிகழ் காலத்தை மறைத்தது. இதே கோலாலம்பூரிலுள்ள அரசாங்க மருத்துவ கல்லூரியில்தான், நானும் முகுந்தனும் எங்களது மருத்துவ படிப்பைத் தொடங்கினோம். முகுந்தவன் என்னைவிட இரண்டு வருட சீனியர். நான் முதலாம் ஆண்டு மருத்துவ கல்வியில் கால் வைத்தபோது, ரேகிங்கில் என்ற பெயரில் என்னையே வட்டமிட்டு எனது கவனத்தை ஈர்த்தான். அதுவரையில் கன்னி மாடத்தில் வாசம் புரிந்த எனது பெண்மைக்கு என்னையே சுற்றி வந்த அவனது மென்மையான ஆண்மை புதியதாகவும் உவகையாகவும் பட்டது. உணர்ச்சிகள் அரும்பி வெடிக்கும் பதிம வயதில் இந்த பரஸ்பர எதிர் பால் ஈர்ப்பு மிக சுலபமாய் என்னை அவனிடத்தில் கட்டிப் போட்டதில் வியப்பில்லை.
காதலோடு பல நாட்கள், ஊடலோடு சில நாட்கள் என நாட்கள் ஓடி போனதில் எனது ஐந்து வருட மருத்துவ படிப்பும் முடிந்து, கோலாலம்பூர் மருத்துவமனையிலே முகுந்தனோடு பயிற்சி மருத்துவராக நியமனமும் கிடைத்தது.முதலில் வார்த்தைகளோடு விளையாடிய காதல், சின்ன சின்ன தீண்டல்களாய், ஸ்பரிசங்களாய் மலர்ந்து, பிறகு தொடுதலே காதலாகி போனது. மருத்துவமனையிலும், ஆய்வு கூடங்களிலும் உடலையும், அதன் அனைத்து அவயங்களையும் பார்த்து பார்த்து, உடம்பைப் பற்றிய பிரக்ஞையே என்னை விட்டு சென்றது. கற்பென்பது வெறும் உடலை சம்பந்தபடுத்திய சாமாச்சாரமாக தோன்றியது. ஆகையால் அதை மீறுவது அத்துனை முக்கியமானது இல்லை என்று எனக்குள் முடிவு பண்ணிக் கொண்டேன். அந்த கணத்தில் புரட்ச்சிகரமாக தோன்றிய எண்ண விழுது, படித்த செறுக்கினால் உருவாகிய வக்கிர விதை, பின்னாளில் எத்துணை பெரிய விளைவுகளை என்னுள் நிகழ்த்தும் என்பது அப்போது தெரியவில்லை. எனது சுயத்தை இழந்து, அவனுள் முழ்கினேன், அவன் என்னுள் கரைந்து போனான். முகுந்தனோடு சுமார் மூன்று மாதங்கள் மனைவியாகவே வாழ்ந்தேன் என்று சொல்லவதில் வெட்கபடவில்லை. அந்த மூன்று மாதங்கள் முன்பனி காலமாய், காதலின் வசந்தத்தைப் பறைச் சாற்றும் கட்டியமாகதான் அப்போது எனக்கு தோன்றியது. வசந்தத்தின் விளைவால், வழக்கமான மாதபோக்கு தள்ளிபோனபோதுதான், எனக்குள் பூத்ததை அறிந்தேன்.
“ஹேய் முகுந், ‘யூரின் பெரக்னென்ஸி டெஸ்ட்’ பொஸட்டிவ் காட்டுது”
“என்னது?”
“நான் கர்பமா இருக்கேன். இப்பவாவது புரியுதா?“
“ஏய்,நீ என்ன விளையாடறியா?”
“நீ விளையாடிட்டு, இப்ப என்னை குற்றம் சொல்லறியா? முதல்ல உங்க வீட்டுல பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க? இன்னும் அதிக நாள் ஆயிட்ட விஷயம் அம்பலம் ஆயிடும்.”
வேறு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவனில் முக ஓட்டத்தைக் கண்டு எனது பேச்சு தடைப் பட்டது.
“என்ன யோசனை முகுந்?”
“என்ன டாக்டர் நீ? கொஞ்சம் கவனமா இருந்திருந்தா பிரச்சனையே இல்லாம இருந்திருக்கும். உனக்குதான் என்ன பண்ணனும்னு தெரியுமே? இது ரொம்ப ஆரம்ப கட்டம்தான், அதனால கர்ப்பபையில கரு இன்னும் ஒழுங்க வளர்திருக்காது. ஏதாவது மருந்து சாப்பிட்டு அபார்ஷன் பண்ணிக்க வேண்டியதுதானே?”
அவனது அபத்தனமான பேச்சினாலும் அல்பமான புத்தியாலும், எனது முகம் கோபத்தினால் சிவந்தது.இத்தனை நாள் மனதுக்குள் ஊடோடியிருந்த அன்னியோனியம் பட்டென்று அறுந்தது போல் இருந்தது, அவனது கொடுரமான வார்த்தைகளை கேட்டபோது. சற்று ஆசுவாசம் அடைந்தவனாய், எனது அருகே வந்து எனது தலை கோதிவிட்ட படியே, பெரிய பாரங்கல்லை எனது தலையில் போடுவான் என்று எதிர்பார்க்கவே வில்லை
“இதோ பாரு லலிதா, நானும் நீயும் கல்யாணம் செஞ்சி ஒன்னும் ஆகபோறது இல்லை. நீயும் நானும் இதே கவர்மென் ஆஸ்பிட்டல்ல வேலை செஞ்சி முன்னேற முடியுங்கிறதெல்லாம் நடக்காத காரியம்.”
எனக்கு மூச்சு பேச்சு இன்றி நாக்கு மேலண்ணத்தில் ஓட்டிக் கொண்டது.
“அதனால, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என்னோட மாமா கூலிம்ல சொந்தமா கிளினிக் வச்சி ரொம்ப சிறப்ப இருக்காரு. அவரோட மகளை, எனக்கு திருமணம் பண்ணி வைக்க விரும்பறாரு. நல்லா யோசனை பண்ணதுல, இதுதான் எனக்கும் நல்லதுன்னு தோனுது. அதனாலே நான் அங்கேயே போறாத இருக்கேன். நீயும் யாராவது பெரிய ஸ்பெஷலிஸ்ட் டாக்டாரோ இல்ல பணக்காரனோ பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. உன் அழகுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம்.” அவன் கூறி முடித்த கணத்தில், எனது மொத்த உயிரும் போயிருக்க கூடாதா எனத் தோன்றியது.
உண்டு முடித்தவுடன் கைகளைத் துடைத்துக் கொள்வது போல், எப்படி அவனால் என்னை நிராகரிக்க முடிந்தது என்ற துக்கமே எனது எத்தனையோ இரவு தூக்கங்களைக் தொலைத்திருந்தது. அவன் தின்று முடித்த எனது இளமைகளின் எச்சத்தைக் காணும் போதெல்லாம் என் மனது தாங்கவென அசூசையும் அறுவருப்பும் கொள்ளும். உடம்பு என்பது உள்ளத்தோடு கூடிய அபூர்வ சேர்க்கையென்று அப்பொழுதுதான் உணர முடிந்தது. கற்பு நெறி பண்பெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல என புரிய தொடங்கியது. அன்று மனதில் விழுந்த ஆழமான காயங்கள்தான், என்னை இன்னும் கன்னியாகுமாரியாக நிற்க வைத்திருகிறது. அந்த நினைவுளை இன்று அசை போடும் போது, எத்துணை முட்டாள்தனமாக, உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு மனமும் உடலும் சிதைந்து போன அவலம் மனதில் நிழலாய் படருகிறது.
“டாக்டர், நீங்க கேட்ட ஷாமளியோட ப்ளாட் ரிசால்ட் ரெடியா இருக்குது.”நர்ஸின் குரல், எனது ஆழ்ந்த மோனத்தை உடைத்து, இயல்புக்குக் கொண்டு வந்தது. அந்த பரிசோதனை முடிவுகளை ஒரு முறை நோட்டம் விட்டபோது, உள்ளே ஒரு பட்சி சோகமாக கூவியது.மறுநாள் காலை, எலும்பு மஜ்ஜைகளை எடுக்க வேண்டி, அந்த குழந்தையைக் பரிசோதிக்கையில், எனது மனதில் அமிழ்ந்து கிடந்த தாய்மை சுனையாய் ஊறியது. இந்நேரம், எனக்கும் முகுந்தனுக்கும் திருமணம் ஆகியிருந்தால், இந்த ஷாமளி எனது மணிவயிற்றில் பிறந்து, எனது முலைக்காம்புகளில் பால் உறிஞ்சி, என் நெஞ்சோடு உறவாட வேண்டியவள். இன்று விதியின் கோலத்தால், அவளே என் கைகளில் பிஞ்சு நோயாளியாக......
தேவையில்லாத எண்ணங்களின் தாக்குதலினால், சற்று நேரம் ஸ்தம்பித்து போனேன். மனதை சுருட்டி, ஓர் ஓரத்தில் கடாசிவிட்டு, எனது பணிகளைத் தொடர்ந்தேன்.எலும்பு கூடாய் இருந்த குழந்தையைக் குப்புற போட்டு. இடுப்பின் அடிபகுதியில், துளையிட வேண்டிய இடத்தை “அல்கோஹலினால்” சுத்தம் செய்தேன். இடுப்பு பகுதியை மரத்து போக வைத்து, ஓர் ஊசியை, மெல்ல எலும்பினுள் சொருகி திருகினேன். மீண்டும் இன்னொரு ஊசியை அதனுள் சொருகி, எலும்பின் உள்ளே இருக்கும் மஜ்ஜை திதுசுக்களை ஒரு வாறாக உறிஞ்சி எடுத்தேன். குழந்தையின் கைகளையும் கால்களையும் நர்ஸ் பிடித்துக் கொண்டாலும், தீனமான குரலில் அழும் சத்தம் என்னுள் கசிவை உண்டு பண்ணியது. வலியினால் முனகும், ஷாமளியை வாரிக் கொண்டு முகுந்தன் அழுத போது, அன்று நான் வடித்த கண்ணீர்துளிகளை நினைத்து பார்க்கிறேன். நம்பியவனிடம் மோசம் போய், அங்கீகாரமற்ற கருவைத் தாங்கி கொண்டு நின்ற வேதனையை சொல்லி மாளாது. ஊர் உலகத்துக்கு பயந்து, என் உயிரில் பூத்த முதல் பூவைக் கசக்கியபோது, எனது பெண்மையும் தாய்மையும் அன்றோடு அழிந்து போனது. முகங் காணாத எனது மூன்று மாத கரு, எனது காதலின் சின்னம், சதைபிண்டமாய் இரத்தக் கட்டிகளாய் வெளியே விழுந்தபோது என்னுள் எழுந்த ஒப்பாரி இன்னும் எனது ஒலித்து கொண்டே இருக்கின்றது. இன்று விதியின் கோலத்தை காணும்போது, சிரிப்புதான் வருகிறது. அன்றும் இப்படிதானே உலகத்தைக் காண துடித்த எனது சிசுவுக்காக அழுதிருப்பேன். இதைதான் விதி கை கொட்டி சிரிக்கின்றது என்று சொல்வார்களோ?
அழுது கொண்டிருந்தவன், எனது கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு“எப்படியாவது என் ஷமளியை காப்பாத்திடு லலிதா” என்று கேவும் போது“நீ என்னுடைய கருவை கொன்ன மாதிரி, நிச்சயமா நான் அப்படி செய்யமாட்டேன். இது என்னோட தொழில், என் தர்மம், இந்த கைகளுக்குக் காப்பாற்றதான் முடியுமே தவிர, அழிக்கறதுக்கு என்னைக்கு முன் வராது. ஒரு முறை அழிச்சதே இந்த ஜென்மத்துக்கும் போதும்.”மனதுக்குள் சொல்லிக் கொண்டேனே ஒழிய, எதுவும் கூறாது முகுந்தனின் கைகளை லேசாக வருடி விட்டு சென்றேன்.நான் நினைத்தது போலவே, எலும்பு மஜ்ஜையின் பரிசோதனை முடிவு, ஷாமளிக்குப் பாதகமாகவே வந்திருந்தது. மனதில் சஞ்சல அலைகள் புரள, திரண்ட கரு மேகங்கள் கண்களைக் கவ்வின.
என்னுடைய சுய இயல்பினை இழந்து, எதற்காக ஷாமளியை நினத்து கலங்க வேண்டும்? இந்த குழந்தையைப் போன்று எத்தனையோ சிசுக்குகளுக்குச் சிகிச்சை அளித்தபோது ஏற்படாத அவஸ்தை, இன்று அதிசயமாக பெருக்கெடுப்பது எதனால்? ஷாமளியின்பால் கொண்ட தாய் பாசமா? அல்ல தன்னை ஒரு காலத்தில் காதலித்தவன் துன்படுகையில் மூளுகிற பரிதவிப்பா? இதில் எதுவென்று புரியாமல் தடுமாறுகையில், கதவை தட்டி உள்ளே நுழைந்தான் முகுந்தன்.அவனை காண திராணியற்று கண்கள் தாழ்கையில், எனது பணியும் அதன் தர்மமும் முன்னே வந்து பழைய லலிதாவை தள்ளி வைத்து, டாக்டர் லலிதாவாய் நிமிர்ந்தேன். ஸ்திரமற்று அலைந்துகொண்டிருந்த அவனது கண்களை காணும் போது, நெஞ்சு கனத்தது.“வெல், மிஸ்டர் முகுந்தன், ஆக கடைசியா பன்ணின பரிசோதனையில உங்க மகளுக்கு ‘அக்கியூட் லிம்போ•பளாஸ்டிக் லுக்கிமியா டைப் எல் 1’ன்னு (Acute Lymphoblastic Leukemia type L1) கன்போ•ம் ஆயிருக்கு. வியாதியோட கண்டிஷனைப் பார்க்குபோது, இன்னும் காப்பாத்தகூடிய வாய்ப்பு நிறைய இருக்கு. மேலும் காலத்தைக் கடத்தாமல், நாளைக்கே கிமோதெரபி ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க வீணா மனசை போட்டு குழப்பிக்க வேண்டாம், இந்த கேஸ்ல, பிழைக்ககூடிய வாய்ப்பு அதிக பட்சமா இருக்கு. இது மாதிரி பிள்ளைங்க, இங்கேர்ந்து நல்லப்டியா தேறி போயிருக்காங்க.”பிரக்ஞையற்று அமர்ந்திருந்த முகுந்தனின், வறண்ட முகத்தில் நம்பிக்கை மின்னல் கண நேரத்தில் வெட்டியது.“புற்றுநோய்யுங்கிறது குணபடுத்த முடியாதது இல்லை முகுந்தன். வெளியில இந்த நோயைப் பற்றி தப்பான பிம்பம் இருந்தாலும், ஒழுங்கான கண்காணிப்பும் சுத்தி உள்ளவங்களோட இடைவிடாத ஆதரவும் ஊக்கமும் இருந்தா குணமாவது நிச்சயம். ஒரு டாக்டரான உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை.”
அன்றைய பொழுதிலிருந்து, ஷாமளிக்குக் கிமோதெரபி வழங்கி, இரத்ததை உற்பத்தி செய்யும் அணுக்களை நுணுக்கமாக பரிசோதித்து, நல்ல அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி விட்டேன். இடைபட்ட ஒருமாத காலத்தில், தோல் போர்த்திய எலும்பு கூடாய் இருந்தவள், எனது பிரத்தியோக கண்காணிப்பால் உடல் தேறி, கன்னங்குழியெல்லாம் சதை பற்று உண்டானது. ஷாமளியைப் பூரணமாக குணமாக்கி ஒப்படைக்கும் போது, எனது உள்ளம் கொண்ட உவகையும் மகிழ்சியும் சொல்லிக் கட்டாது. என்றோ ஒரு நாள், எனது மூலஸ்தானத்தில் தங்கிய கருவை உயிருடன் பெற்று எடுத்த நிம்மதியைக் கொடுத்தது.ஷாமளியோடு முகுந்தன் வீடு திரும்பும் போது,“என்னை மன்னிச்சிடு லலிதா” இமைகளின் ஓரத்தில் அரும்பிய கண்ணீர், விழிக் குளத்தில் அலம்பியது. “நன்றி சொல்ல வேண்டிய நேரத்துல, மன்னிப்பு எதுக்கு முகுந்?” பழைய அன்னியோனியம் எனது குரலில் தெரிந்தது. இதில் சத்தியமாக காதலனை அழைக்கும் உருக்கம் இல்லை. தவறு செய்து திருந்தி வந்த நண்பனை எதிர்கொள்ளும் பாவமே மிகுந்திருந்தது.
“நீ ரொம்ப பெரிய மனுஷி... இதுக்கு மேலே என்னால சொல்லமுடியல.” சப்தங்கள் தொண்டைக்குழியின் நாலபக்கமும் சிதற, வெறும் திணறல்தான் வெளிப்பட்டது.“மன்னிக்க தெரிஞ்சவன்தான் மனுஷன் முகுந். நான் மனுஷனாகவே இருக்க ஆசைபடறேன். நல்லபடியா போய் வா.”அவன் சென்ற தடங்களையே பார்த்துக் கொண்டிருகிறேன். மனம் மட்டிலும் எதற்கு ஓட்டாததது போல் அன்னிச்சையாக முனகியது.“நீ பண்ண தப்பை எப்பவோ ஞாபகத்திலேர்ந்து கழற்றி வைச்சுட்டேன் முகுந். நான் பண்ணின பெரிய தப்பை, என் மடியில ஜனித்த முதல் அரும்பைக் கலச்சதுதான் இன்னும் மறக்கமுடியல. உன்னை மன்னிச்ச மாதிரி, என்னால என்னை மன்னிக்கமுடியலையே முகுந். இந்த குற்றவுணர்ச்சி மனசுல இருக்கிற வரைக்கும், எங்கிட்ட வர்ற எல்லா குழந்தைகளையும் உயிரக் கொடுத்து காப்பாத்துவேன். அப்பதான் என்னையே சுத்திக்கிட்டு இருக்கிற அந்த சின்ன ஆத்மா என்னை மன்னிக்கும்.” மனதுக்குள் வைராக்கியமாய் உணர்வுகள் மேலீட்டன.“டாக்டர், ஐந்தாம் நம்பர் பெட்டுக்கு புதுசா இன்னொரு கேஸ¤ வந்திருக்கு. மீண்டும் டாக்டர் லலிதாவாய் என் குழந்தைக்கு செய்யும் கைங்காரியமாய், ஐந்தாம் நம்பர் பெட் குழந்தையை நோக்கி நடக்க தொடங்கினேன்.