புதன், 5 டிசம்பர், 2007

தொடுவானம்

என்னுடைய நான்காண்டுகால லண்டன் வாசத்தில், ஏதாவது தமிழில் எழுத வேண்டும் என எண்ணி, வலிய வரைந்த கதை இது. இந்த கதை பெண்ணியத்தைப் பற்றி பேசினாலும், பெண்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகளின் ஆதாரம் ஆண்களின் ஆதிக்க மனபாண்மை என்பதை மறுக்க முடியாது.

பெண்கள் பெண்களுக்காக எழுதுவது ஆச்சரியம் இல்லைதான். அது இயல்பு. அதுவே ஆணாக இருக்கும் பட்சத்தில், ஆண்கள் பெண்ணியத்தைத் தொடும்போது, பரிவும், பதைபதைப்பும், சற்று கூடுதலான அக்கறையும் இருக்கும் என நம்புகிறேன். ஏன்னா இன்னைக்கு இருக்கும் Gynaecologist ‍list- இல் (பெண்மை பிணியியல் மற்றும் மகப் பேறு நிபுணர்கள்) பெரும்பான்மை ஆண்களே வகிக்கிறார்கள். இது ஆண்கள், பெண்களின்பால் வைத்திருக்கும் இயற்கையான பற்றுதலையும் பரிவையும் புரிய வைக்கிறது.

ஒர் ஆண்ணென்ற‌ அறிதலின் பேரில் பெண்க‌ளைப் ப‌ற்றி புரிந்துக் கொள்ள‌ நான் எடுத்துக் கொண்ட‌ முத‌ல் முய‌ற்சி.

பின்குறிப்பு: இந்த கதை 2003-ஆம் ஆண்டு மக்கள் ஓசையில் வெளியீடு கண்டது

ந‌ன்றி

சினேக‌முட‌ன்

ஆர்.இராஜேஸ்
-------------------------------------------------------------------------------



லண்டன் ஹீத்தூரோ விமான நிலையத்தில், தனது முதல் காலடியை, அந்நிய மண்ணில் ஊன்றிய பொழுது- நிவேதாவின் அடி வயிறு கலங்கி ஏதோ இனம் காணாத மருட்சி கண்களில் அடைக்கலமாகியது. யாருமற்ற தனிமையில், வரவேற்க ஏவருமில்லாத ஸ்திதியில், தனது உடைமைகளைப் பெற்றுக் கொண்டு, டாக்சிக்குக் காத்திருக்கும் தருணம் கொடுமையானது. வெள்ளைக்கார டாக்சியோட்டிக்குத், தான் செல்ல வேண்டிய இடத்தினை விளக்குவதற்குள், நிவேதாவிற்கு மூச்சு முட்டியது. இளங்காலை வேளையில், சூரியன் இன்னும் பனிபடலங்களின் இருந்து முழுவதும் விடுப்படாத நிலையில், குளிர்காற்று மேனி முழுவதையும் ஊசியாய் துளைத்தது. தோளில் மாட்டியிருந்த, தோல்பையை நெஞ்சோடு இறுக அணைத்து, தனக்கு தானே வெம்மையை ஏற்படுத்துக் கொண்டாள். இலையில்லா மொட்டை மரங்கள், பின்னோக்கி ஓடுவதையும், காற்றில் நூல் பிரிய பறக்கும் தனது முடிக் கற்றைகளை ஒதுக்கி கொண்டும், தனது வெற்று பார்வையை வெளியே சிதறவிட்டாள்.
எத்துணை பிரயத்தனப்பட்டு மனதை அடக்கினாலும், நெருக்கிய பிடியிலிருந்து நழுவி ஓடும் சின்னக் குழந்தையாய் அது அவளை விட்டு வெகுதூரம் விலகி சென்றது. இலை உதிர்ந்து, வெறும் குச்சிக் கூடுகளாய் காட்சியளிக்கும் மரங்களைத் தாண்டும் போதெல்லாம், மனது மளுக்கென்று உடைந்து, சரக்கென்று நீர்த் திவலைகள் தெறிப்பதைத் த‌விர்க்கமுடியவில்லை. அம்மாவை நினைக்கும் போதெல்லாம், நெஞ்சுக்குழி ஏறியிறங்கி, துக்கம் பந்தாய் தொண்டையை அடைக்கிறது. இந்த தள்ளாத வயதில், அவளை நிராதரவாய் அண்ணனிடம் ஒரு வேலைக்காரியாய் ஒப்படைத்து வருகையில், இருதயமே ஈரக்குலையிருந்து அறுந்து கீழே விழுந்தது. தனக்கு இருந்த ஒற்றை ஆதரவும், தனியே பிரிந்து, கடல் தாண்டி போகையில், சற்றும் கலங்காமல் நெஞ்சுரத்தோடு போய் வா என்று சொன்ன அம்மாவின் கண்களில் படிந்திருந்த சோகமும் பிரிவுத் துயரும், நிவேதாவின் கண்ணீர் சுரபிகளைத் துரிதமாக்கியது. தாயைப் பிரிந்து, தாய் மண்ணைப் பிரிந்து, எங்கோ வெகுதூரம் செல்ல வேண்டிய நிர்பந்தம்தான் என்ன? அதை நிவேதாவிடமே கேட்டு விடுவோமே....
நிவேதா....எனக்குன்னு அழகா அமைஞ்சது இந்த பேரு மட்டும்தான். மத்தவங்கெல்லாம் என்னை அழகின்னு சொன்னபோது, கர்வப்பட்டது எவ்வளவு அபத்தம்ன்னு இப்ப அழறபோது தெரியுது. எனக்கு நினைவு தெரிஞ்சி, என் குடும்பத்துல மூனே பேர்தான், நான், அம்மா அப்புறம் அண்ணன். எல்லோரையும் போலத்தான் என்னோட சின்ன வயசும் துள்ளலோடும், குதியலோடும், கஷ்டங்கள் என்னவென்று தெரியாத விளையாட்டு பருவத்துல கழிஞ்சது. இங்க, நான் முக்கியமா சொல்ல வேண்டியது, எங்க அண்ணன் குணாவைப் பத்திதான். என்னதான், நான் அவனுக்கு ஒரே தங்கச்சியாய் என்றபோதிலும், அதுவென்னவோ என்மேல அவனுக்கு அப்படியாப்பட்ட வெறுப்பு. நான் எங்க அம்மாவைப் போல, நல்லா கலரா இருப்பேன். கோதுமை நிறத்துல வெண்ணையை கலந்தாப்பல அப்படி ஒரு நிறம். இதற்கு நேர்மாறா குணா, நிறத்துல அப்பாவை போலவாம், கொஞ்சம் கறுப்பா (ரொம்பவே) அசமஞ்சமா இருப்பான். இந்த நிற வேற்றுமைதான் எங்களிடையே ஒரு பிரிவை உண்டு பண்ணியிருக்கனும். அதோட மட்டுமல்லாமல், படிப்புல நான் முதலாவதுன்னா, குணா கடைசிக்கு முதலாவதா இருப்பான். சின்ன வயசிலேர்ந்து, எனக்கும் அவனுக்கும் என்னைக்கும் ஏழாம் பொருத்தம்தான். முதல்ல பெரிசா தெரியாத இந்த வேற்றுமை, நாங்க வளர வளர எங்களுக்குள்ளே ஒரு தடுப்பு சுவரை உண்டு பண்ணியது என்னவோ சர்வ நிச்சயம்.ஒற்றை பெண்பிள்ளையென்று, அம்மா என்னைக் கொஞ்சி வளர்த்தது அவனுக்கு பொறுக்கவில்லை போலும். அம்மா என்னை மட்டிலும் உயர்வாய் பாசமாய் செல்லமாய் கவனிப்பது போன்ற பிரம்மையை அவனுக்குள் உருவாக்கியதில் வியப்பில்லை. போததிற்க்கு, வீட்டுக்கு முதல் ஆண்பிள்ளை பொறுப்புக்களைச் சுமப்பதில் அவனுக்கு ஏகப்பட்ட கரிச்சல். எங்கேயாவது, கல்யாண சுபநிகழ்சிகளுக்குக் குடும்பத்தோடு சேர்ந்து போகும் போது, மற்றவர்கள் எழுப்பி விடுகின்ற விமர்சனங்கள், குணாவை இன்னும் உசுப்பி விட்டதில் தப்பில்லை.
“அட இது உங்க மகனா? என்று யாராவது மாமி கேட்டு, அம்மா தலையாட்டினால் விஷயம் அதோடு முடிந்திருக்கும். பிறகு கூடவே,
“நீங்க நல்ல தக்காளி நிறமா, மூக்கும் முழியுமா இருக்கீங்க, உங்க மகளும் அச்சு அசலா உங்க ஜாடை, அதான் கேட்டேன்.” கல்யாணத்திற்கு வந்திருக்கும் மாமி எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவாள்.“இல்ல, அவன் அவங்க அப்பா மாதிரி”.
என்று அம்மா சிரித்து வைத்த போதிலும், நடுவில் இருக்கும் குணாவிற்கு முகமெல்லாம் சிவந்து கோபமும் அவமானமும் புருபுருவென நடு மண்டைக்கு ஏறும்.புகைமூட்டங்களுக்கு இடையே தெரியும் பிம்பங்களைப் போலதான் எங்களது உறவும் இருந்தது. ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தோம் என்று சொல்வதை விட, தனி தனி தீவாய் ஒதுங்கி இருந்தோம் என்று சொல்வதே மெத்த பொருத்தம்.
இந்த விலகல் படலம் எனக்கு புரியவில்லை என்று சொல்வதைவிட நான் அதை இலட்சியபடுத்தவில்லை என்பேதே உண்மை. அந்த இருபத்து நான்கு வயதின் இளமைமையும், தாதிமை தொழிலும் எனக்கு வீட்டில் நடக்கும் பனிப்போரைப் புலப்படுத்தவில்லை.அண்ணனைப் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு, என்னைப் பற்றி, அந்த இருபத்துநான்கு வயது அழகு நிலா-நிவேதாவைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் போனால் எப்படி? எனது இளமைக் காலங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வது சற்று கூச்சமாகவும், அதே சமயம் மீண்டும் அந்த வயதில் திளைத்த ஆனந்தத்தையும் எனக்கு தருகிறது. எதை ஆனந்தம், சந்தோஷம் சொர்கம் என்று முதலில் நினைக்கிறோமோ, அதுவே பின்னாளில் துன்பமாய், அதன் நினைவே நரக வேதனையாய் சில பேர்களுக்கு வாய்த்து விடுகிறது. அப்படியாப்பட்ட துரதிஷ்டசாலிகளில் நானும் ஒருத்தி!!!!!உடலில் பூத்திருக்கும் இளமை, எனது லாவண்யத்தை மெருகேற்றி புடம்போட்டிருந்த பருவமது. முதன் முறையாக தாதிமை பயிற்சியை முடித்து, தனியார் மருத்தவமனையில் தாதியாய் வேலையில் அமர்ந்த சமயம். மனதில் சந்தோஷங்களே நிரம்பி, கைநிறைய வருமானமும், முகம் வழிய சிரிப்பும் கும்மாளமுமாய் கழிந்த இளவேனில் காலம்.
அந்த காலகட்டத்தில், சராசரியாய் ஒரு பொண்ணுக்கு என்ன நடந்திருக்கும் என்று யாராலும் சுலபமாய் ஊகிக்க முடியும்.எனது சந்தோஷங்களைத், தோஷங்களாக்கி, என்னை மூலையில் முடக்கி போட்டது காதல் என்னும் மாயப் பிசாசு. நான் வேலை செய்யும் மருத்துவமனையில், டாக்டராக பணிப்புரியும் சிவாதான் எனது இளமை பிணிக்கு மருந்தாய் இருந்தவர். இன்று நினைத்துப் பார்க்கும் பொழுது, எதனை அடிப்படையாக கொண்டு சிவாவின் மீது எனக்கு காதல், தப்பு காதல் என்று சொல்வதை விட ஈர்ப்பு வந்தது? என்று விடை காண முடியவில்லை. கொப்பளித்து ததும்பி வழியும் இளமைக்கு வடிகாலாய்தான் சிவா அமைந்தாரா என்ற வினா இன்னும் எனது மண்டையைக் குடைகிறது.சிவாவின் கல்யாண குணங்களை நன்கு அறியாமல். அவரின் ஒவ்வொரு செய்கைக்கும் நடுவில் ஒளிந்திருக்கும் சூட்சுமங்களைச் சரியாக புரிந்துக் கொள்ளாமல், அவருக்கு கழுத்தை நீட்டியது எவ்வளவு தப்பு என்று பட்ட பின்பு புரிகிறது.
காதலிக்கும் போது, நடந்த ஒரு சம்பவத்தை இப்போது நினைவு கூறுகிறேன். ஏதோ ஒரு மருத்தவமனையைச் சார்ந்த விழாவில், என் சக தாதி தோழியின் கணவரிடம் குலுங்கி சிரித்து பழகியது, சிவாவின் முகத்தை அந்த அளவுக்கு கோரமாக்கும் என நப்பவில்லை. விழா நடக்கும் போதே, எனது கையை பிடித்து தர தரவென இழுத்து காருக்கு கொண்டு போய், பளாரென கன்னம் பழுக்க அறைந்தது, இன்னும் நினைவில் இருக்கின்றது. நான் பிரமைப் பிடித்து நிற்கையில்,எனது கையை இறுக அணைத்துக் கொண்டு,
“ஸாரி நிவேதா.....நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். நீ மத்தவங்ககிட்ட சிரிச்சி பேசறதை கூட என்னால பொறுத்துக்க முடியாது. நீ எனக்கு வேணும். எனக்கு மட்டும்தான் வேண்டும் ....ஐ லவ் யூ வெரி மச்...” என்று பிணாத்திய போது,ரோஷம் பொங்க, குறைந்தபட்சம் ஏசியாவது இருக்க வேண்டும். ஆனால் காதல் மயக்கம் என்பார்களே, அது அப்படியே என்னை முயக்கி,‘என் மேல என்னவொரு வெறித்தனமான அன்பிருந்தா, நான் மத்தவங்க கிட்ட சிரிச்சி பேசறதுகூட சிவாவால தாங்கிக்க முடியல. என் மேல அவ்வளவு காதலா?’ என்ற கோணத்தில்தான் எனது சிந்தனைகள் சென்றன. பிறகென்ன, ஒரு நல்ல முகூர்த்த நாளில், இரு தரப்பு சம்மதங்களோடு எங்கள் கல்யாணம் நடந்தேறியது. ஏற்கனவே என்னை எட்டிக் காயாய் நினைக்கும் குணா, இப்போது கண் நிறைந்த டாக்டரை கணவராக கொண்டதில் இன்னும் துவேஷம் கூடி போய், அடியோடு விலகி விட்டான்.எல்லா புதுமண பெண்களை போன்றுதான், என்னுடைய இல்லற வாழ்க்கையும் மிக இனிமையாக ஆரம்பித்தது. என்னையே சதா காலமும் சுற்றி வரும் அன்பு கணவன் என்று மிகவும் பூரித்து போனேன். ஆனால், யாருக்குதான் இன்பம் தொடர்கதையாய் இருந்ததாக வரலாறு உள்ளது?
எனது வாழ்வின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் சமாதியாக்க குழி தோண்டப்படுவது பிறகுதான் உறைத்தது. மொத்தமாய் எனது உடலை, உள்ளத்தை, ஆசைகளை குத்தகைக்கு எடுத்ததுபோல் அவர் நடந்துக் கொள்ளும் போதுதான், இல்லற வாழ்க்கையின் மறுப்பக்கம் எனக்கு மெல்ல புரிந்தது. சிவாவின் ஒட்டு மொத்த ஆளுமை, ‘பொஸஸிவ்னஸ்’ வெளிச்சத்திற்கு வந்த போது, அடி மேல் அடியாய் அமைந்த சம்பவங்கள் என்னை நிலை குலைத்தன. எந்த நேரமும் அவரை, அவரை மட்டிலும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று குறியாய் இருந்தார்.அதற்கு தடையாய் எனது தாதிமை உத்தியோகம் இருப்பது அவரது கண்ணை உறுத்தியது போலும். சிவா என்னிடம் வேலையிலிருந்து விலகுமாறு சொன்னபோதுதான், எங்களிடையே முதற்சண்டை வலுத்தது.“இப்ப வேலையை விட்டு நிக்கற அளவுக்கு என்ன அவசியம் சிவா.”“முதல்ல கட்டின புருஷன, பெயரைச் சொல்லி கூப்பிடறத நிறுத்து. புருஷன்னு ஒரு மதிப்பும் மரியாதையும் வேண்டாம். சிவாவின் மற்றும் ஒரு புதிய முகம் எனக்கு லேசாய் பிரசன்னமாயிற்று.
“கல்யாணத்துக்கு முந்தி நீ எப்படி வேணுமாலும் இருந்திருக்கலாம், இப்ப நீ ஒரு டாக்டரோட பொண்டாட்டி. கண்ட கண்ட ஆம்பிள்ளைங்க கூட இழிச்சி சிரிச்சி பேசிறது எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கல.”“நான் ஒரு நர்ஸ்,அவங்க என்னோட பேஷண்ட், ஒரு டாக்டரா இருந்துக்கிட்டு நீங்களே இப்படி புரியாம பேசலாமா?“உனக்குதான் மனைவிங்கற அந்தஸ்து புரியல. முதல்ல நீ எனக்கு பொண்டாட்டி, அப்புறம்தான் நர்ஸ், அதை புரிஞ்சிக்கோ. புருஷன் என்ன சொல்லறான்னோ அதைதான் பொண்டாட்டி கேட்கணும். உங்க வீட்டுல அதெல்லாம் சொல்லி தரலியா? “என்று ஏளன பார்வை பார்த்தபோது, எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ஒரு நீண்ட சண்டைக்குப் பிறகு, நான் எனது வேலை இராஜினாமா செய்து விட்டு, வீட்டோடு இருந்துவிட்டேன்.தமிழில் ஒரு பழமொழி உண்டு. இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காதாம். சிவாவை பார்ப்பதற்கு வருகை புரியும் அவரது சினேகிதர்களுடன் சற்று சிரித்து கல கலவென உரையாடிவிட்டால், அவரது முகம் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி ஆகிவிடும்.
“நீ இப்படி குழைஞ்சி பேசி சிரிக்கிறதால தான், அவனுங்க அடிக்கடி என்னைப் பார்க்க வர்ற சாக்குல உன்னை டாவடிகிறானுங்க” என்று சொந்த நண்பர்கள் மீதே சந்தேகம் கொள்வார்.அதன் பிறகு,“வீட்டுல உள்ள பொம்பளைங்க அடக்கமா இருந்தா, வெளியே இருந்து வர்றவன் கையெடுத்து கும்பிடுவான். உனக்கும் அடக்கத்துக்கும்தான் நூறு மைல் தூரமாச்சே. சிகப்பு தோலும், மூக்கும் முழியுமா இருந்தா மட்டும் போதாது, அச்சம் நாணம் மடம் பயிர்ப்புன்னு மத்த குணங்களும் வேணும். எங்கம்மால்லாம் வெத்து ஆம்பிள்ளைங்க முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கமாட்டங்க. இதெல்லாம் பரம்பரையிலே வரணும்.”“பாவம் உங்கம்மா .” முதல் முதலாக எனது எதிர்பைக் காட்டினேன்.
“கிண்டலா. உனக்குதான், என்னைதவிர மத்த எல்லா ஆம்பிள்ளைங்களைக் கண்டாலே இனிக்குமே.” அந்த வார்த்தைகளின் அபத்தமும் வெம்மையும் சட்டென உறைக்க, எனது பொறுமை ஒரு கணத்தில் எல்லையைத் மீறியது, ஆக்ரோஷம் கொப்பளிக்க
“ஆமாம், நான் அப்படிதான், இப்ப அதுக்கு என்ன?”
என்று சொன்னதுதான் ஞாபகம் இருந்தது. சற்று நேரம் என்ன நடக்கிறது என சுதாரித்து பார்க்கையில், முதுகு, கன்னம், காது முகமெல்லாம் வீங்கி, உதட்டோரம் சிறு கோடாய் இரத்தம் வழிந்திருந்தது. இதையெல்லாம் விட, ஆக கொடுமை என்னவென்றால், கிழிந்த நாறாய் இரத்த விளாரல்களோடு நான் முனகுகையில், ஒரு கணவராக கூட வேண்டாம், குறைந்த பட்சம் டாக்டராக இருந்து எனக்கு உதவியிருக்கவேண்டும். ஆனால், அவர் உதிர்த்து சென்ற வார்த்தைகள், அன்றோடு எனது மூன்று வருடகால இல்லற பந்தத்தை முற்றாக அறுத்துப் போட்டது.‘புருஷனக்கு அடங்காத பொண்டாட்டி, அடிப்பட்டுதான் சாகணும்.’பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும். எவ்வளவு உண்மையான கூற்று இது. எனது வேதனைகளைக் கண்டு குணா இரக்கபடாவிட்டாலும் கூட, எனது இரணத்தை இன்னும் பெரிதாக்காமல் இருக்கலாம். என்னுடைய நிலையைக் கண்டு பூரிப்பு அடைந்தானோ என்னவோ,
“நாந்தான் இரதின்னு மனசுல நினைச்சுக்கிட்டு மத்த ஆம்பிள்ளைங்ககிட்ட கொஞ்சி குலாவினா, எந்த புருஷங்காரந்தான் சும்மா இருப்பான். பொண்ணுன்னா அடக்கம் வேணும், உன்ன மாதிரி அடங்காபிடாரியெல்லாம் இப்படிதான் வாழவெட்டியா நிக்கணும். குணாவின் எகத்தாள பேச்சு, எனது மனபுண்ணில் அமிலத்தை ஊற்றியது.அம்மாவால், என்னோடு சேர்ந்துக் கொண்டு அழதான் முடிந்தது. கங்கையில் மூழ்கினாலும், சனிஸ்வரன் விட்டபாடில்லை எனக்கு.
அதுவரையின் நாலு சுவருக்குள் மூடி இருந்த எனது விவகாரம், சிவாவின் அநாகரிக செய்கையால், ஊரெல்லாம் பரவி வெளி வாசலில் தலைக் காட்ட கூட முடியாமல் செய்து விட்டது. வீட்டின் முன்னே வந்து, வாய்க்கு வந்ததையெல்லாம் யோசிக்காமல் அள்ளி தெறித்து, எனது மானம் வெட்ட வெளியில் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், ஊரில் என்ன பேச்சு தெரியுமா?‘ஒரு படிச்ச டாக்டரே இப்படி மனசொடைஞ்சி பேசறாருனா, இவ என்ன அக்கிரமம் பன்ணியிருக்கனும்.’ பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம். இத்தனை அடிகளும் போதாதென்று, குணா தலையில் ஒரேடியாய் ஒங்கி பெரிய இடியை இறக்கினான்.
“உன்னால என்னோட மானமரியாதையெல்லாம் கப்பல் ஏறுது. நீ இப்படி வாழவெட்டியாய், தண்டசோறு தின்னுகிட்டு இருந்தா, எனக்கு எந்த மடையன் பொண்ணு தருவான். உங்கூட இருந்தா, எனக்கு வர்ற பொண்டாட்டிக்கும் உன் குணம் ஒட்டிக்கும்......”
அவன் முடிக்கவில்லை, அதற்குள் அம்மா தாங்கா மாட்டாது வெடித்தே விட்டாள்.“டேய், மூடுறா வாயை. நீயெல்லாம் ஒரு அண்ணனுன்னு சொல்லிக்க வெட்கமா இல்ல? என் பொண்ணு சொக்க தங்கம்னு எனக்கு தெரியும். பொண்ணுங்க பொறுமையில பூமாதேவிடா, என்ன கஷ்டம், அவபேரு வந்தாலும் தாங்கிக்குவாங்கா. ஆனா, உங்களா மாதிரி ஆம்பிள்ளைங்களுக்கு, பொண்ணுங்க பொறுமையா போனா, ரொம்பதான் துளுத்து போகுது.”என்னைப் பார்த்து,
“நீ ஏண்டி கவலை படற. இந்த புருஷனும் அண்ணனும் உனக்கு ஆயுள் மட்டும் துணைக்கு வர்ற மாட்டானுங்க. உன் கையில தொழில் இருக்கு, மனசுல திடம் இருக்கு. இவனுங்க மூஞ்சியிலே முழிக்காம எங்கையாவது கண் காணாத இடத்துக்கு பொழைக்க போடியம்மா.”அன்றோடு, எல்லா நிகழ்வுகளையும் மனதிலிருந்து சுத்தமாய் துடைத்தெறிந்துவிட்டு, என்னையே நிதானமாக சரி செய்துக் கொண்டேன். லண்டனில் உள்ள மருத்துவமனையில், தாதியாக வேலை செய்து கொண்டே மேற்படிப்பு படிக்க இடமும் சன்மானமும் கிடைத்தது.அம்மாவை விட்டு பிரியும் போது மனம் நெகிழ்தது.
“என்னை பத்தி கவலை படாதடி செல்லம். உங்கண்ணனுக்கும், அவனுக்கு வர்ற போற பொண்டாட்டிக்கும் எப்படியும் வீட்டு வேலைகளை செய்யறத்துக்கு வேலைக்காரி தேவைப்படும், அது நானாக இருந்துட்டு போறேன். நீ தளர்ந்திடாதே, இவனுகளுக்கு முன்னே நீ தலை நிமிர்ந்து நிக்கனும். நல்லபடியா போய்ட்டு வாடி என் கண்ணு.” இவ்வளவுதான் என்னோட பழைய கதை. இந்த எல்லா அமர்களமும் ஓய்ஞ்ச பிறகு கூட, என்னால இன்னும் சில கேள்விகளுக்கு விடை காண முடியல. என் கணவரோட அதிகப்பட்ச ஆளுமையை, நல்ல படிச்ச என்னால, ஏன் ஆரம்பகட்டதிலே எதிர்க்கமுடியல? கணவனே கண் கண்ட தெய்வம்ன்னு சொல்லி வளர்த்த, வாழ்க்கை முறை என் அறிவை பிசக்கி அடிமையாய் வாழ நிர்பந்த படுத்தியதா?ஆனால், காரணம் எதுவா இருந்தா என்ன? இனியொரு முறை எனது அறிவை அடகு வைக்ககூடதுன்னு மனசுக்குள்ள வைராக்கியம் மூளுது. துன்பங்களும் சோதனைகளும் தொடுவானம் மாதிரி, முடிவது போல தோற்றம் அளிச்சாலும் நீண்டு கொண்டேதான் போகும். அதுக்காக தேங்கி நின்னற கூடாது, தொடுவானத்தை துரத்துற பட்சியா ஒடிக்கிட்டே இருக்கனும். நான், இப்பதான் ஓடவே ஆரம்பிச்சிருக்கேன், நீங்க.....?

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Rajesh,extraordinary and superb flow of elegance. Keep up the work!

பெயரில்லா சொன்னது…

mm.. only girl can understand much bout another girl.. but the writer really amazed!! keep up buddy!

பெயரில்லா சொன்னது…

இன்றைய நவீன உலகத்தில் கலாச்சாரம் என்ற போர்வைக்குள் பல பெண்கள்... அறிவை அடகு வைத்து மீட்டெடுக்க முடியாமல் தவிக்கின்றனர்..