புதன், 27 பிப்ரவரி, 2008

நாகலீலை தோட்டம் (Nagalilit or Nagalelai Estate)

நாகலீலை தோட்டம் (Nagalilit Estate or Nagalelai Estate)

இதுவும் என்னுடைய சுய பிரஸ்தாபம்தான். ஆனால் இங்கு பிரதாபிக்க போவது என்னை பற்றியல்ல. என்னுள் சலனமற்ற நதியாய் ஒடிக்கொண்டிருக்கும் எனது தோட்டபுற வாழ்வின் நினைவுகளைப் படமாய் வரைய முனைகிறேன். தோட்டகாடுகள் மடிந்து, அங்கு புதுபுது வீடமைப்பு திட்டங்கள் முளைப்பது, தொழிற்சாலைகள் உருவாகுவது ஒரு சாதாரண விஷயம்தான். நலிந்துபோன தோட்ட வாழ்க்கையிலிருந்து மீள முடியாத ஜென்மங்களும், வெகு தூரம் பிரிந்து போயினும் தோட்ட வாழ்க்கையின் தாக்கத்தை மறக்காத மனிதர்களின் மன துயரங்கள் வெகு சுலபமாய், சர்வ சாதாரணமாய் ஜீரணிக்கபடுவதில்லை. அந்த துயரகங்கின் ஒரு பொறிதான் என்னை இங்கு எழுத வைத்திருக்கிறது.

எத்தனையோ வருடங்கள், இந்திய பால்மர குடியேறிகளுக்குச் சொர்க்க பூமியாய் இருந்த இந்த புண்ணிய பூமி, காலத்தின் மாற்றத்தால் உருவிழந்து போன கதையைதான் இங்கு பேச போகிறேன். பேசப்படும் கதை ஒன்றாக இருந்த போதிலும், இதனுள் பேசாத, அறியாத கதைகளும் நிறைய நிறையவே உள்ளன. அவற்றையெல்லாம் எழுத ஒரு சகாப்தம் போதாது. ஏதோ எனது சொற்ப அறிவிற்கு எட்டியதை, பேசக் கேட்டு அறிந்ததை, பட்டு புரிந்ததை உங்களுக்கும் கொஞ்சம் தருகிறேன். பிறந்தது முதல் முப்பது வருடங்கள் தோட்டப் பட்டிகாட்டில் திரிந்து வளர்ந்த அந்த எளிய வாழ்க்கையை மீண்டும் நினைவு கூறுகிறேன். இரப்பர் மரமே அடியோடு பூண்டொழிந்த எனது தோட்டத்தின் கதையை இங்கு ஆவணப்படுத்துகிறேன்.

அன்னவயலுக்கு பேர்போன கெடா மாநில கூலிம் வட்டாரத்தில், பாடாங் செராய் என்னும் சின்ன நகரத்திற்குச் சில மைல் தூரத்தில் பச்சென்று ஒரு சின்ன தோட்டம். நகரத்திற்கு அருகில் இருப்பதால் என்னவோ போக்குவரத்து பிரச்சனைகளும், அத்தியாவசிய தேவைகளுக்கும் என்றுமே சுணக்கம் இல்லாத ஒரு சின்ன கிராமம். செல்லமாய் கட்டையன் தோட்டம் என அழைக்கப்படும் ஒரு இரப்பர் எஸ்டேட்தான் அது.

ஊரில் மூலைக்கு மூன்று கோவில்கள். ஊர் எல்லையில், பிரதான நுழைவாயிலில் அரிவாளோடு சிதிலமடைந்த ஒரு மதுரைவீரன் கோயில். கோவில் என்று சொல்வதை விட அதை கூடு என்றே சொல்ல வேண்டும். இன்றைய தேதியில், மதுரைவீரன் நிறைய பட்டினிகளைப் பார்த்திருக்க வேண்டும். சுருங்கி கொண்டிருக்கும் தோட்ட ஜனங்களால், மதுரை வீரன் கோழியையும் ஆட்டையும் பார்த்து வெகு நாட்களாயிருக்கும்.
அந்த காவல் தெய்வத்தைத் தாண்டி செல்லும் பாதையில்தான் தோட்டத்தின் ஜீவகளையே அடங்கியிருக்கும். அந்த பிரதான சாலையில் இருமருங்கிலும் வரிசையாய் கட்டபட்ட தோட்டத்து வீடுகள். இன்னும் சாலை ஓரங்களின் தலையை ஒய்யாரமாய் ஆட்டும் குறு மரங்களினால் தயவால் தோட்டபுற காட்சி மூளியாகாமால் பேரிளங்கன்னியாய் தளர்ந்து இருக்கிறது. நெடிதுயர்ந்த புன்னை மரங்கள் புடை சூழ இருந்த காலங்கள் போய், அவைகள் இருந்த இடத்தில் காலியாய், அடிதூறுமாய் மரதுண்டங்கள்தான் எஞ்சி இருக்கின்றன. என்னுடைய இளம் பிராயத்தில், மார்கழி முடிந்து, பொங்கல் உண்ட எச்சில் கையோடு மஞ்சள் பூ விரித்த புன்னை மர நிழலின் கோலி விளையாடியது இன்று போல் பசுமையாகதான் இருக்கிறது.
தொடரும்............

கருத்துகள் இல்லை: