வீணையடி நீ எனக்கு
இவ்வளவு அருகில், அவரை இப்போதுதான் நிமிர்ந்து பார்க்கிறேன். ஓம குண்டத்திலிருந்து புகைந்து வரும் நெடி புகையின் வாயிலாக அவரை, அவர்தான் கோபியை, இன்னும் சில நொடி பொழுதுகளின் எனது பெண்மைக்கு ஒட்டுமொத்த உரிமையாளனாக போகும் எனது கணவனை, அந்த கணம்தான் அவ்வளவு அருகில் இருந்து பார்க்கிறேன். மணபெண் என்கிற கூச்சநாச்சமெல்லாம் கடந்து போன பருவத்தில், அவரை அப்படி பார்ப்பதில் எனக்கு கொஞ்சம் கூட லஜ்ஜையோ நாணமோ இல்லை. இந்த முப்பத்தியாறு வயதில் என்னையொத்த பெண்களெல்லாம் நிறைந்த சுமங்கலியாய், இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் வளைய வரும் போது, இன்னும் நான் மட்டுமே புதுபெண்ணாய்! இருந்தபோதிலும், பெண்மைக்கான உணர்வுகளையெல்லாம் தொலைந்து அதிக நாளாயிற்று என எனது நாள்பட்ட மாதவிலக்கே சொல்லாமல் சொல்லியது. அது என்னவோ, என்னால் இந்த வயதிலும்கூட மிகைப்பட்ட உணர்வுகளோடு இணைந்திருக்க முடியவில்லை. அம்மா மணவறையின் ஓரத்தில், யாருக்கும் புலப்படாமல் மறைந்து தனது அமங்கலி கோலம் தனது மகளின் மங்கல நாளை மாசுபடுத்த கூடாதென்று மருகி, கண்களில் நீரைச் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளது உதிரத்தில் உதித்த மற்ற பெண்கள், என்னை விடவும் வயதில் இளைய ச...