இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாகலீலைத் தோட்டம் (2)

அந்த நாட்களில் உடுத்த சரியான உடை கிடையாது, நாகரீகம் சற்று தூர நின்று எட்டி பார்க்கும் கால வெளியில், மனதின் குதூகலத்திற்கு அளவே கிடையாது. வெறும் கித்தா மர கொட்டைகளை வைத்து கோலி விளையாடிய போது முகிழ்ந்த முழுமையும் உள்ள களிப்பும் இப்போது ஸ்நோ போவ்லிங் உருட்டும் உவகையில் இல்லை. கண்ணாடிகுஞ்சு சிறுமீன்களைப் பிடிக்க மாட்டு அட்டைகள் நிறைந்த ஓடைகளில் உருண்டு பிரண்டதும், மீன்குஞ்சுகள் என எண்ணி தலைப்பிரட்டைகளைக் கொண்டு போய் ஏமாந்து நின்றது, இன்று சன்வே லகூனில் நீர் சறுக்கு பலகை எனக்கு தரவில்லை. நாகலீலைத் தோட்டத்தில் மிக முக்கியமாய் எல்லா சுற்று புற பொடுசுகளும் அறிந்தது 21ஆம் நம்பர் ஆறு. பெயர் சற்று வித்தியாசமாக இருந்தாலும், 21ஆம் நம்பர் இரப்பர் நிறையின் (பகுதியில்) ஊடாக அந்த தெளிந்த ஆறு இருந்ததால் ஏற்பட்ட நாமகரணமே அது. ஸ்படிகமாய் ஓடும் அந்த நதியின் அடியில் புரளும் வெள்ளை மணல் சிறு மேடுகளைத் துல்லியமாய் காணலாம். பருவங்களுக்குத் தகுந்தபடி மாறும் அதன் உள்ளாழங்களும், வட்ட வட்ட நீர் சுழிப்பும், அடியாழத்தில் நிரடி கொண்டிருக்கும் காய்ந்த இரப்பர் மர இலைகளும், உச்சி வரை சில்லிடவைக்கும் தட்பமும் வேறு எங்...